தலைக்கேறிய போதை! ரூமில் உடன் தங்கியவர் செய்த காரியம்! லாரி டிரைவருக்கு நடந்த கொடூரம்.. ஆடிப்போன கோவை
கோவை: கோவை அருகே டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை, அவர் உடன் தங்கியிருந்த கேரள நபர் மதுபாட்டிலால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுபாட்டிலால் அடித்து தாக்கிவிட்டு தப்பி சென்ற கேரள நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷியாம். இவர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே உள்ள செட்டிப்பாளையம் - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக உள்ள சிமெண்ட், கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். இங்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

ஆறுமுகம், கடையில் உள்ள பொருட்களை மினி லாரி மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்து வரும் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மினி லாரியில் ஷியாமும் வருவார். ஆறுமுகமும், ஷியாமும் கடையின் மேல் உள்ள ரூமில் தான் தங்கி வந்தனர். வழக்கம் போல் நேற்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். பின்னர் ரூமில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து களைப்பில் ஆறுமுகம் தூங்கிவிட்டார். ஆனால் தூக்கம் வராததால் தொடர்ந்து ஷியாம் டிவியில் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் டிவியில் சவுண்ட் அதிகமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகம் எழுந்து, சவுண்டை குறைக்குமாறு கூறியிருக்கிறார். அப்போது ஷியாம் குறைக்க முடியாது என்று போதையில் கூறியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அருகில் கிடந்த மதுபாட்டிலை எடுத்த ஷியாம், நண்பர் என்றும் பாராமல் ஆறுமுகத்தின் தலையில் ஓங்கி அறைந்துள்ளார். மேலும் ஆத்திரம் தாங்க முடியாத அவர் மார்பு உள்ளிட்ட இடங்களிலும் தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் அலறியபடி அப்படியே மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன ஆனதோ ஏது ஆனதோ என பதற்றத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அப்போது ஆறுமுகம் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ஷியாம் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்தி போன் செய்தனர். தொடர்ந்து ஆறுமுகம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே அதிகாலை 3 மணியளவில் ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய ஷியாமை தேடி வருகிறார்கள். ஷியாம் மீது ஏற்கனவே கேரளாவில் பல்வேறு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர் பிடிபட்ட பிறகே என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications