பொள்ளாச்சி அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய ஆசாமி.. போலீஸாக மாறி நடத்துனர் செய்த தரமான சம்பவம்
கோவை: கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி சென்றார். நடத்துனர் மற்றும் பொது மக்கள் துரிதமாக செயல்பட்டு அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, உள்ளிட்ட போதை பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் புதிய புதிய வழிகளில் போதை பொருள்களை கடத்தி விற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அண்மை காலமாக புதிய புதிய போதை பொருள்கள் புழக்கத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் போதை பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஜா உசைன் ( வயது 45). இவர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பழனியில் இருந்து பாலக்காடு செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்தில் ஏறியுள்ளார். அவரது கையில் இரண்டு பைகள் இருந்துள்ளன . பேருந்து தமிழ்நாடு – கேரளா எல்லையான கோபாலபுரம் காவல்துறை சோதனை சாவடியை கடக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை.
செக் போஸ்ட் அருகே சென்றபோது பேருந்தின் நடத்துனர், காஜா உசைனிடம் இரண்டு பைகளுக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார். பையில் என்ன இருக்கிறது என்று நடத்துனர் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் உடனடியாக ஓட்டுநரை காவல்துறையின் சோதனை சாவடியில் நிறுத்த சொல்லியுள்ளார்.
அப்போது காஜா உசைன் மதுபோதையில் இருந்துள்ளார். சிக்கி கொண்டதை உணர்ந்த அவர் பைகளை விட்டுவிட்டு, ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்ப முயற்சித்தார். இதையறிந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் உடனடியாக காஜா உசைனை விரட்டி சென்று பிடித்துவிட்டனர்.
தொடர்ந்து அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை அவர் மீது வழக்குபதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் 17 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவர் யார், அவரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications