பைனான்ஸ் தொழில்போட்டியில் நிகழ்ந்த கொலை! இந்து முன்னணி நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்!
கோவை: கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பைனான்ஸ் தொழில்போட்டியில் தன்னிடம் வேலை பார்த்த முன்னாள் ஊழியரை தீர்த்துக்கட்டிய வழக்கில் குண்டாஸ் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம்
கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தன்னிடம் ஏற்கனவே வேலைபார்த்து பிறகு பிரிந்து சென்று தனியாக பைனான்ஸ் நிறுவனம் தொடங்கிய சரவண சுந்தரம் என்ற இளைஞரை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியிருக்கிறார். இந்த கொலை வழக்கில் ராஜேந்திரன் மற்றும் கூலிப்படை கும்பலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டாஸ் பாய்ந்தது
இந்தச் சூழலில் இந்து முன்னணி நிர்வாகி ராஜேந்திரன் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி காவல்துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி கொலை நிகழ்ந்த நிலையில், உடனடியாக அதில் தொடர்புடைய நபர்களை அன்னூர் போலீஸார் விரைந்து கைது செய்தனர்.

சட்டம் ஒழுங்கு
அண்மைக்காலமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இத்தகைய கெடுபிடிகளை தமிழகம் தழுவிய அளவில் காவல்துறை மேற்கொண்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் கொலை கொள்ளை உட்பட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பட்டியல் ஒன்றையும் தயாரித்து அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

கொலைக்கு காரணம்
கொலை செய்யப்பட்ட சரவண சுந்தரம், ராஜேந்திரன் நடத்தி வரும் பைனான்ஸ் நிறுவனத்தில் சில மாதங்கள் பணியாற்றிய நிலையில் தனியாக பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இது ராஜேந்திரனுக்கு தொழில் போட்டியை கொடுத்ததால் தனது முன்னாள் ஊழியர் மீது விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications