அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆட்டுக்குட்டி பரிசு.. "பிரியாணி ரெடி” கமெண்ட்.. பிரச்சாரத்தில் கலகல!
கோவை: கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆட்டுக்குட்டி பரிசளிக்கப்பட்டது. ஆட்டுக்குட்டி தலையைத் தடவிக் கொடுத்து டிஆர்பி ராஜா கமெண்ட் அடித்ததால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இன்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் இன்று கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது கோவை மாவட்டத்துக்கான முழுப் பொறுப்பையும் திமுக தலைமை அவரிடமே கொடுத்திருந்தது. இப்போது அவர் சிறையில் இருப்பதால் கோவை தொகுதி பொறுப்பு தொழில் துறை அமைச்சரும், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக அமைச்சர் டிஆர்பி ராஜா கோவையில் முகாமிட்டுள்ளார்.
கோவை மக்களவை தொகுதி அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் எஸ்பி வேலுமணியின் ஏரியா. அதிமுக சார்பில் அக்கட்சியின் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். மேலும் பாஜகவும் கணிசமான செல்வாக்கை கொண்டிருக்கும் பகுதி. போதாக்குறைக்கு பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனால் தேர்தல் களம் சூடாகியுள்ளது. வேட்பாளர்கள் இடையே வார்த்தை மோதல்களும் நடந்து வருகின்றன.
இன்று கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக கோவை மருதமலை முருகன் கோவில்ல் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர், பின்னர் மருதமலை அடிவாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவருக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் கட்சியினர் உதயசூரியன் சின்னம் பொறித்த வேல் ஒன்றை, திமுக வேட்பாளருக்கு பரிசாக அளித்தனர்.
மருதமலை பகுதியில் பழங்குடி மக்களின் வீடுகளுக்கு சென்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர். அப்போது அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஆட்டுக்குட்டி ஒன்று பரிசளிக்கப்பட்டது. அதனை திமுக வேட்பாளர் ராஜ்குமாருக்கு பதிலாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெற்றுக்கொண்டார்.
ஆட்டுக்குட்டியை அன்பளிப்பாக அளித்ததும், வாய்விட்டுச் சிரித்த டிஆர்பி ராஜா, ஆட்டுக்குட்டியின் தலையை தடவிக் கொடுத்தார். பிரியாணிக்கு தயாராக இருக்கிறோம் என திமுகவினர் சிலர் கமெண்ட் அடித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் சிரிப்பலை நிலவியது.
அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளர் என்றதுமே, திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா, "தேர்தல் முடிந்ததும் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம், இப்போதுதான் செய்தி பார்த்தேன். கோவையில் மட்டன் பிரியாணி ரெடியாகின்றது. சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாகிக் கொண்டிருக்கிறது" என்று சீண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications