"நீதான்யா திருடணும்".. 20 லட்சம் ரூபாய் காரை அசால்டாக திருடி.. அசிங்கமாக மாட்டிய கோவை நபர்
கோவை: கோவையில் கார் ஷோரூமுக்குள் சென்ற நபர் ஒருவர் கார் வாங்குவதுபோல நடித்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக் காரை நூதனமாகத் திருடிச் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் அதே கடைக்கு அவர் நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது காவல் துறையிடம் வசமாக சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் திருச்சி சாலையில் தனியார் கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இந்த ஷோரூமில் சரவணகுமார் என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். சரவணகுமார் ஷோரூம் மற்றும் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது, அங்கிருந்த கார் ஒன்று மாயமாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் உடனடியாக அந்த ஷோரூமில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தார். அப்பொழுது ஒரு காரின் அருகே மர்ம நபர் ஒருவர் வந்து நிற்பதும், பின்னர் சிறிது நேரம் அந்த காரை சுற்றிச் சுற்றியும் வந்துள்ளது அந்த வீடியோ பதிவில் பதிவாகியுள்ளது. அந்த காரின் மதிப்பு ரூபாய் 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆய்வாளர் தெளலத் நிஷா என்பவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படை போலீஸார் ஷோரூம் உட்பட பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தினர்.
மேலும், ஷோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், காரை திருடிச் சென்ற நபர் அந்த ஷோரூம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் மோட்டார் சைக்கிளை யாராவது எடுக்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அந்த மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். உடனடியாக ஊழியர்கள் அந்த நபரைப் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்துகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த கர்ணன் என்பது தெரியவந்தது.
காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஷோரூம் சென்று கார் வாங்குவதுபோல நடித்து ரூ. 20 லட்சம் எலக்ட்ரிக் காரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கர்ணனை உடனடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியவதாவது: சிங்காநல்லூர், திருச்சி சாலையில் உள்ள கார் ஷோரூமுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கர்ணன் கார் வாங்குவதற்காக அந்த ஷோரூமிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த எலக்ட்ரானிக் கார் ஒன்றை பார்த்துள்ளார். பின்னர், அந்த காரை ஓட்டிப் பார்த்து விட்டு விரைவில் வாங்குவதாகக் கூறியுள்ளார்.
வாடகைக்கு இருசக்கர வாகனம் ஓட்டிவரும் கர்ணன் தன்னிடம் போதிய பணம் இல்லாததால் அந்த காரை திருடிச் செல்ல முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஷோரூமுக்குச் சென்ற கர்ணன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் காரை செக் செய்து பார்த்துள்ளார். அப்போது, அந்த காரில் சாவி இருப்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கர்ணன் கார் வாங்குவதற்காக வந்த நபர் என்பதால், அந்த ஷோரூமில் இருந்தவர்களுக்கும் அவர் மீது எந்தவித சந்தேகமும் வராமல் இருந்துள்ளது. பின்னர், கர்ணன் அங்கிருந்த காரை நூதனமாக திருடிச் சென்றுள்ளார். உல்லாசமாகவும், சொகுசாகவும் காரைத் திருடியதாக கர்ணன் போலீஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications