டாஸ்மாக் திறப்பு.. எல்லை தாண்டும் மதுபிரியர்கள்.. கோவையில் மீண்டும் கொரோனா அதிகரிக்கும் அபாயம்
கோவை: கொரோனா கட்டுப்பாடுகளால் மது வாங்கக் கேரளாவில் இருந்து அதிகளவில் வரும் மது பிரியர்களால் வைரஸ் பரவல் மீண்டும் கோவையில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை பரவ தொடங்கியது. மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெற்றது.
அப்போது மாநிலத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது. அதேபோல உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்தது.

கொரோனா 2ஆம் அலை
இதையடுத்து மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு இரண்டு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்தது. இருப்பினும், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு குறையாமலேயே இருந்தது. இதனால் கோவையில் மட்டும் குறைந்த அளவிலேயே தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாவட்டம்
தீவிர கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை காரணமாகக் கோவையிலும் தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கோவைக்குக் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மதுக் கடைகள், நகைக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது இப்போது புதிய தலைவலியைக் கோவை மாநகராட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டம்
அதாவது கோவை மாவட்டம் தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது. அதேபோல கேரளா பகுதியில் பாலக்காடு அமைந்துள்ளது. கேரளாவிலேயே பாலக்காடு மாவட்டத்தில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம். இதனால் பாலக்காடு மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழ்நாடு - கேரளா
இதனால் மதுபானங்களை வாங்கப் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து பலரும் கோவைக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர மொத்தம் ஆறு வழித்தடங்கள் உள்ளன. இதில் கேரளாவில் இருந்து பலரும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி கோவைக்கு வந்து மது வாங்கி செல்கின்றனர்.

எல்லை மீறும் மது பிரியர்கள்
ஏற்கனவே, கொரோனா 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர அதிக காலம் ஆனது கோவை மாவட்டத்தில் தான். இந்தச் சூழ்நிலையில், இப்படி எல்லை தாண்டி வந்து மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்களால் மாவட்டத்தில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் உள்ள வழித்தடங்களில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி, முறையான காரணங்களின்றி தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அம்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளது.












Click it and Unblock the Notifications