சென்னையை போல் கோவையும் இருக்கோணும்.. மிஸ்ஸானால் ஆக்ஷன்தான்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அட்வைஸ்!
கோவை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமித்த நாள் முதல் அந்த மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள திமுக நிர்வாகிகள் புகைச்சலில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் அவர் நேர்காணல் நடத்திய போது நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் அவர் விடுத்தது பழைய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில் பாலாஜி- வெட்டிக் கொண்டு வா என்றால் கட்டிக் கொண்டு வருவார், அந்த அளவுக்கு கெட்டிக்காரர். அதிமுகவில் இருந்த போதிலும் சரி, திமுகவிலும் சரி, கட்சி தலைமை உத்தரவிட்டால் இதை செயல்படுத்தாமல் விட மாட்டார். இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குட் வில் புக்கில் எப்போதுமே செந்தில் பாலாஜிக்கு இடமுண்டு.

அதிமுக
திமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்று அங்கிருந்து அமமுகவில் பயணித்து பின்னர் தனது தாய் கழகமான திமுகவுக்கே வந்துவிட்டார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்துக்காரர். திமுகவுக்கு வந்தவுடனே கரூர் மாவட்டத்தில் முக்கிய பதவியை கொடுத்து அழகு பார்த்தது திமுக தலைமை. இதையடுத்து அவர் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் எம்எல்ஏ, பின்னர் 2021 சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ டூ அமைச்சர் என படுபிசியாகிவிட்டார்.

செந்தில் பாலாஜி
உழைப்புக்கேற்ற ஊதியம் என்பார்கள், அது செந்தில் பாலாஜியின் விஷயத்தில் சரியாகவே உள்ளது. கட்சியின் வெற்றிக்காக அவர் உழைத்துக் கொண்டே இருப்பதால் அவருக்கு பொறுப்புகள் கூடிக் கொண்டே உள்ளது. சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக கூட்டணியால் வெல்ல முடியவில்லை. இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தையே திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என திமுக தலைமை விரும்புகிறது.

கோவை மாவட்டம்
இதற்காக செயல்வீரர் என கருதப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. ஏற்கெனவே கரூரில் முக்கிய பதவி வழங்கப்பட்டதற்கே அங்கு புகைச்சல், இதில் கோவை மாவட்டத்திலும் செந்தில் பாலாஜிக்கு கட்சி தலைமை முக்கியத்துவம் அளித்ததை சில நிர்வாகிகள் விரும்பவில்லை என தெரிகிறது. ஆனால் செந்தில் பாலாஜி அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தல் பணிகளில் ஜரூராக ஈடுபட்டு வருகிறார்.

திமுக விருப்பமனுக்கள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் திமுக விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. அவற்றை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு நேர்காணல் நடத்தி வருகிறார். அந்த வகையில் தொண்டாமுத்தூர், செல்வபுரம், காந்தி பார்க், அவினாசி, அன்னூர், உடுமலைப்பேட்டை, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, சமத்தூர், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

திமுக கோட்டை
இந்த நேர்காணலுக்கு வரும் நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், கோவையை திமுக கோட்டையாக்க வேண்டும். சென்னையில் ஒரு தொகுதியில் கூட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறாதபடி சட்டசபை தேர்தலில் சாதித்ததை போல கோவையிலும் இந்த முறை நகர்ப்புறத்தை நம் வசமாக்க வேண்டும். இதற்காக நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் கடுமையாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். எனவே வேட்பாளர் குறித்த முடிவை திமுக தலைமை முடிவு செய்யும்.

உள்ளடி வேலைகளும் வேண்டாம்
இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம். உதயசூரியன்தான் நம் வேட்பாளர் என ஒவ்வொருவரும் கருத வேண்டும். விருப்பு வெறுப்பின்றி செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!. அதே வேளையில் சீட்டு தராத அதிருப்தியில் உள்ளடி வேலைகளில் ஈடுபடாதீர். தலைமைக்கு தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உழைத்தால் அதற்கான பலன் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications