“நாளைய இந்தியாவே!” மேடையில் வைத்தே புகழ்ந்த செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்சன்
“இன்றைக்கு தமிழ்நாடு புன்னகைக்கின்றது. நாளை இந்தியாவே புன்னகைக்கட்டும். அதற்கான அச்சாரமாக இந்த நன்றி அறிவிப்பு மாநாடு இருக்கட்டும்.”
கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே அவரை நாளைய இந்தியாவே என்று அமைச்சர் செந்தில் பாலாஜி புகழ்ந்து இருக்கிறார். ஸ்டாலின் இந்திய பிரதமராகலாம் என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்த நிலையில் செந்தில் பாலாஜியின் இக்கருத்தும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோவையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் நன்றி அறிவிப்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

செந்தில் பாலாஜி பேச்சு
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பும் பாராட்டு விழாவும். இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடியவர்கள், தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி சங்கங்களின் நிர்வாகிகள் என்று எண்ணிப்பார்க்கிறபோது இதற்கு முன் இதுபோன்ற நிகழ்வு நடந்திருக்கிறதா என்றால் இதுவே முதல்முறை.

விசைத்தறி சங்க மாநாடு
உயிரை கையில் பிடித்துக்கொண்டு, உயிரை விடவும் மானம் பெரிது என்று எண்ணும் மக்கள் வாழும் மக்கள் வாழ்ந்த மண் நம் தமிழ் மண். மக்களின் மானம் காக்கும் ஆடைகளை நெய்ய விடிய விடிய தரி ஓட்டும் நெசவாளர்கள் வாழும் இப்பகுதிக்கு வந்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வருக வருக என்று வரவேற்கிறோம்.

இறையே, உழைப்பே..
ஒரு பக்கம் பண மதிப்பிழப்பு தொடங்கி, மறுபக்கம் நூல் விலையேற்றம் வரை அடிமேல் அடியாய் விழ ஒவ்வொரு அடியிலும் இனி கைத்தூக்கி விட யார் வருவார் என்று காத்துக்கிடந்த நெசவாளர்களுக்கு வராது வந்த மாமணியை போல யாருக்கு என்ன தேவை என அறிந்து வள்ளுவன் சொன்னதை முறை செய்து காப்பாற்றும் இறையே, உழைப்பே, அருஞ்செயலே, கழகமே, தமிழ்நாடே, எங்கள் தலைவரே..

நாளைய இந்தியாவே
மக்களின் தேவைகளை ஆராய்ந்து துறை ரீதியான திட்டங்களை அறிவித்து வரும் இன்றைய தமிழ்நாடே! நாளைய இந்தியாவே! வருக என்று நெசவாளர்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறோம். பெண்களுக்கு இலவச பேருந்து தொடங்கி இடஒதுக்கீடு என தனித்தனி சலுகைகள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். விசைத்தறி நெசவாளர்கள் 1000 யூனிட் இலவச மின்சாரம்.

தூங்காமல் விழித்துள்ளார்
கைத்தறி நெசவாளார்கள் இலவச 300 யூனிட் மின்சாரம். கல்வித்துறைக்கு சலுகைகள் என ஒவ்வொரு துறைகள் வாரியாக தனித்தனியாக சலுகைகளும் திட்டங்களும் ஓயாது வந்துகொண்டு இருக்கின்றன. முதலமைச்சர் தூங்குவது இல்லை. அவர் தூங்காமல் விழித்து ஒவ்வொரு நாளும் ஒரு திட்டம், ஒவ்வொரு நாளும் சலுகை என அறிவித்து ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோரின் கனவுகள் நனவாகிக் கொண்டு இருக்கின்றன.

200 ஆண்டுக்கான திட்டம்
இப்படிப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்விலே திமுக என்றாலே செயல் என்பார்கள். முதலமைச்சர் என்றாலே உழைப்பு என்பார்கள். இன்று செயலும் உழைப்பும் சேர்ந்து வேகம் எடுத்திருக்கிறது. வெற்றிநடை போடுகிறது நம் தமிழ்நாடு. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 200 ஆண்டுகளுக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கின்றன. சொல்லிக்கொண்டு இருப்பதில்லை.

மேற்கு மண்டலம்
ஒரு சிலர் வாய் ஜாலத்தில் பேசிக்கொண்டு இருப்பார்கள். மேற்கு மண்டலம் எங்கள் சொத்து என்பார்கள். அவர்களுக்கு எல்லாம் நிரந்தரமாக முடிவுரை எழுதி இருக்கிறார்கள் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள். இனி மேற்கு மண்டலம் மட்டுமல்ல, சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த தமிழ்நாடும் முதலமைச்சர் கரங்கள் என்பதை ஈரோடு கிழக்கு மக்கள் உணர்த்தி உள்ளார்கள்.

இந்தியாவே புன்னகைக்கட்டும்
சொல்லிக்கொண்டு இருப்பதில்லை, செயலில் காட்டிக்கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இன்றைக்கு தமிழ்நாடு புன்னகைக்கின்றது. நாளை இந்தியாவே புன்னகைக்கட்டும். அதற்கான அச்சாரமாக இந்த நன்றி அறிவிப்பு மாநாடு இருக்கட்டும்." என்று பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் பேச்சையே உற்று நோக்கிக்கொண்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications