கோவையில் பரபரப்பு.. கிறிஸ்தவ தேவாலயத்தில் சரமாரி கல்வீச்சு.. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்
கோவை : கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிடி தேவாலயம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் அந்த தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு குவிவது வழக்கம் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

தேவாலயம் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்று இரவு தேவாலய வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் வாயில் முன்பாக உள்ள சிலை மீது கல் வீசி தாக்குதல் நடத்தி விட்டு ஓடியுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஆலய நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

காவல்நிலையத்தில் புகார்
இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு நடத்தினர். அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆலய வளாகத்திற்குள் எகிறி குதித்து உள்ளே புகுந்து கற்களை பொறுக்கி ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியதும் இதில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சிலை சேதம் அடைந்தது பதிவாகியிருந்தது.

மர்ம நபர்கள் குறித்து விசாரணை
மேலும் தாக்குதல் நடத்திய நபர்களை கோவில் இரவு காவலர் துரத்திப் பிடிக்க முயன்ற போதும் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.இதையடுத்து சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் தடயங்களை சேகரித்து உள்ள போலீசார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

கோவையில் பரபரப்பு
கடந்த சில நாட்களாகவே வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் தேவாலயத்தில் கற்கள் வீசித் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் எனவும், மாவட்டத்தில் பொதுமக்களின் அமைதிக்கும் பங்கன் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications