கோவை மாவட்டத்திற்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள்.. கொரோனாவை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை
கோவை: தமிழ்நாட்டில் வரும் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்திற்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மே மாதம் உச்சமடைந்தது. இதையடுத்து மாநிலத்தில் முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
அப்போதும்கூட கோவை உட்பட மேற்கு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வர நீண்ட நாட்கள் ஆனது. அதன் பின்னரே அந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம்
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் செப். 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தடை
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைக்கடைகள் மற்றும் துணிகடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்குத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து மால்களும் (Malls) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களை இரவு 8 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதைக் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

Array
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும்/ அடுமனைகள் (Bakery) காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மார்க்கெட்டுகளில் (Whole Sale Market) மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டுச் சந்தை தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கேரளா
கேரள- தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாகக் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுவர்.

பள்ளிகள்
01.09.2021 முதல் அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகளும் சுழற்சி முறையில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவியர்கள் தினசரி வந்து (Day Scholar} செல்ல அனுமதியில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து (School and College Hostels) விடுதிகள் மற்றும் பணிபுரிபவர்களுக்காகச் செயல்படும் (Working men/ Women Hostel) விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என அனைவரும் தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதுடன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

திருமணம்
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், RT PCR பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதைச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications