‛கும்மி’ எடுத்த கோவை மக்கள்... உதவிக்கு சென்ற உபி இளைஞரின் உடல் புண்ணானது.. என்னாச்சி?
கோவை: கோவையில் பஞ்சு மிட்டாய் விற்கும் வடமாநில இளைஞரை குழந்தை கடத்தல்காரர் என நினைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறுமிக்கு உதவி செய்த இளைஞருக்கு நேர்ந்த இந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் கட்டட தொழில்களில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பானிபூரி, பஞ்சு மிட்டாய், குல்பி, ஜூஸ் உள்ளிட்ட வியாபாரத்திலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழில் நகரமான கோவை மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு பீகார், ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தனியாகவும், குடும்பத்துடனும் வந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இறந்ததாக புதைத்த பச்சிளம் குழந்தை.. 1 மணி நேரம் கழித்து உயிரோடு வந்த அதிசயம்! நெகிழ்ந்த பெற்றோர்
காவல்துறை விபரங்கள் சேகரிப்பு
இதற்கிடையே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்த புகார்களால் கோவையில் பணிக்காக வரக்கூடிய வடமாநிலத் தொழிலாளர்களின் முழு விவரங்களை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தினர் சேகரித்து அதை காவல் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவைக்கு வேலைக்காக வரும் வடமாநில தொழிலாளர்கள் விபரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்.
இளைஞர் மீது தாக்குதல்
இந்த சூழலில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் கோவை ரயில் நிலையம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் நகரின் பல்வேறு பகுதிகளில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகிறார். நேற்று சிங்காநல்லூர் பகுதிக்கு பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு சென்றார். அங்கு அவர் அடிக்கடி வியாபாரம் செய்து வந்ததால் சிறுமிகளுக்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்தார். இந்நிலையில் 4 வயது சிறுமி அங்குள்ள கடைக்கு வந்தார். அந்த சிறுமி யோகேசுடன் சென்றதை பார்த்த பொதுமக்கள் அவர் குழந்தையை கடத்தி செல்வதாக நினைத்தனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர்.
உதவி செய்தவருக்கு நேர்ந்த சோகம்
இதையடுத்து, தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் அந்த இளைஞரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் வியாபாரத்துக்கு சென்றபோது சாலையை கடக்க முடியாமல் சிறுமி நின்றதாகவும், கையை பிடித்து சாலையை கடக்க அவர் உதவியதாகவும் தெரிவித்தார். மேலும் இதனை தவறாக புரிந்து கொண்ட மக்கள் குழந்தை கடத்தல்காரன் எனக்கூறி தாக்கியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
மீண்டும் தாக்குதல்
இந்நிலையில் அந்த இளைஞர் பந்தய சாலையில் பஞ்சு மிட்டாய் வியாபாரத்திற்கு சென்றார். அப்போது சிறுமியின் தாய், அவரை பார்த்தார். மேலும் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையிடம் கூறினார். காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் எப்படி வெளியே வந்தார் என்றுஅதிர்ச்சியடைந்த அவர் வடமாநில இளைஞரை பொதுஇடத்தில் வைத்து சரமாரியாக தாக்கினார். பொதுமக்களிடமும் இவர் சிங்காநல்லூர் பகுதியில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர் எனக் கூறியுள்ளார். மேலும், இவர்கள் ஒரு நெட்வொர்க் போல செயல்பட்டு குழந்தைகளை கடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட,அங்கிருந்த பொதுமக்களும் இந்த பஞ்சு மிட்டாய் விற்க வந்த இளைஞரை சரமாரியாக தாக்க தொடங்கினர்.
மீட்ட போலீசார்
இதையடுத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பந்தயசாலை போலீசார் மொழி தெரியாமல் செய்வதறியாது தவித்த இளைஞரை மீட்டு விசாரித்தனர். அப்போது, குழந்தை கடத்தல்காரர் என தவறாக எண்ணி அந்த இளைஞரை மீண்டும் பொதுமக்கள் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட சிறுமியின் தந்தையையும், பொதுமக்களையும் போலீசார் எச்சரித்ததோடு, சந்தேகம் இருந்தால் நேரடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டுமே தவிர, என்னவென்று விசாரிக்காமல் தாக்குதலில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம், என எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.