எம்ஜிஆர்,ஜெ வாரிசு ஓபிஎஸ்! தீர்ப்பு கண்டிப்பா எங்களுக்குத் தான் சாதகம்! அடித்துச் செல்லும் தேனி டீம்
கோவை : ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை ஒரு வாரம் நன்கு விசாரித்துள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசான தான் உச்சநீதிமன்றத்தில் ஆதரவாக தீர்ப்பு வரும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அவர் அணி கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி கூறியுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் முழுமையாக விசாரித்துள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டு உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக தான் தீர்ப்பு வரும். ஓபிஎஸ் தான் அதிமுகவின் தலைமையை ஏற்பார். உயர் நீதிமன்றத்தில் ஈ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தவறாக வழி நடத்தியுள்ளார்கள். அவர்கள் கூறிய பொய்கள் எல்லாம் இந்த முறை எடுபடாது.
அவசரபட்ட எடப்பாடி! ஓபிஎஸ்ஐ காப்பாற்ற போகும் எம்ஜிஆர்? இதுதான் நடக்கும்..ஆருடம் சொல்லும் தேனி தரப்பு!
புகழேந்தி
பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. ஈ.பி.எஸ் அர்த்தமே இல்லாமல் சட்டமன்றத்திற்கும் கருப்பு சட்டை அணிந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை விட எஸ்.பி.வேலுமணி தெளிவானவர். ஈ.பி.எஸ்க்கு பதிலாக வேலுமணி வழி நடத்தலாம். சட்டமன்றத்தில் ஆளுநர் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை கூறாமல் தவிர்த்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்காக திமுக ஆளுநருடன் தினமும் மோதல் போக்கை கடைபிடிக்கக்கூடாது. சட்டமன்றத்தில் நடந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிட வேண்டும்.
ஆளுநர் வெளிநடப்பு
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தான் வெளிநடப்பு செய்யும். ஆனால் ஆளுநர் வெளிநடப்பு செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளுநர் செயல்பட்ட விதத்தின் மூலம் அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டார். திமுக அரசு கோடநாடு வழக்கை ஒரு வருடம் வைத்து விசாரித்து கோட்டை விட்டுவிட்டு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளார்கள். முதல்வர் தேர்தல் நேரத்தில் ஒன்றரை மணி நேரம் கோடநாடு வழக்கு பற்றி பேசினார். ஆனால் தற்போது வரை ஏன் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என சட்டமன்றத்தில் ஈ.பி.எஸ் பேசுகிறார்.
கோடநாடு கொலை
கோடநாடு கொலை வழக்கில் சிக்கியுள்ள ஈ.பி.எஸ், தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற ஈ.பி.எஸ் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவதற்கு என்ன அருகதை உள்ளது. சட்டமன்றத்தில் முதல்வர் கோடநாடு வழக்கு பற்றி பேச தொடங்கியதுமே ஈ.பி.எஸ் உடனே வெளிநடப்பு செய்கிறார். அப்பன் புதிருக்குள் இல்லை என்பதைப் போல உள்ளது ஈ.பி.எஸ்ஸின் நடவடிக்கை. முதல்வர் கோடநாடு வழக்கு பற்றி பேசியபோது ஈ.பி.எஸ் சட்டமன்றத்தில் எதிர்த்து பேசியிருக்க வேண்டும். அப்போது பேசாமல் ஏன் ஒதுங்கினார். ஓ.பி.எஸ் விரைவில் கோவைக்கு வருவார்.
திமுக அரசு
பாஜக - திமுக மோதல் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்தவர், "ஆளுநர் அரசியல்வாதி இல்லை என்பதை அவர் உணர வேண்டும். சட்டமன்றத்தில் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக அரசு ஆளுநருடன் மோதல் போக்கை கைவிட வேண்டும். ஆளுநரைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். ஓபிஎஸ் திமுகவுடன் நெருக்கமாக செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், "கோடநாடு மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள இவர்கள் இன்னும் ஏன் கைதாகாமல் இருக்கிறார்கள். நாங்கள் அதிமுக அழிந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளோம்
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பிரிந்து விட வேண்டாம் என திமுகவினர் கூட என்னிடம் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் 55 ஆண்டுகள் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த நிலை போய் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வர காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அனுமதித்து விடக்கூடாது. அதிமுகவை அழிக்கும் வேலையை தான் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அதிமுகவில் மெகா கூட்டணி எங்கு உள்ளது. பாமக வெளியே சென்றுவிட்டது, தேமுதிகவை வெளியேற்றிவிட்டார்கள்.
ஓபிஎஸ் மீது மரியாதை
குஜராத் முதல்வர் பதவியேற்புக்கு அகமதாபாத் சென்றபோது பிரதமர் மோடி கூட ஓ.பி.எஸ்-ஐ தனிப்பட்ட முறையில் விசாரித்தார். ஓ.பி.எஸ்-ஐ நம்பி தலைவர்கள் கூட்டணிக்கு வருவார்கள். எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார். அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள்." என்றார். ஓ.பி.எஸ் இப்போதும் அதிமுக ஒருங்கிணைப்பிற்கு தயாராக உள்ளார். மூன்று நான்கு பிரிவுகளாக இருக்கும் அதிமுக ஒன்றாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். இப்படி நான்கு பிரிவுகளாக இருந்தால் திமுகவிற்கு தேர்தலே தேவையில்லை" என்று தெரிவித்தார்.