எங்க முதல்வர் + எங்க ஆளுநர்.. 2 பேரையும் விட்டுத்தர மாட்டோம்! அடடே.. அண்ணாமலை பேச்சை கவனிச்சீங்களா?
ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையே சுமுக உறவு நிலவுவதாகக் கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கோவை : முதல்வர் எங்களுடைய முதல்வர், ஆளுநர் எங்களுடைய ஆளுநர் என்றும், இருவரையும் விட்டுகொடுக்க மாட்டோம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி இடையெ பல்வேறு விஷயங்களில் பனிப்போர் நிலவி வந்த சூழலில் ஆளுநருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த அண்ணாமலை தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு பற்றி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசிக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கு திமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆளுநர் அளித்த பொங்கல் விழா விருந்தையும் ஆளுங்கட்சியான திமுக புறக்கணித்தது. பின்னர், குடியரசு தின தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி: எல்லா கேள்விக்கும் 2 நாளில் விடை.. அண்ணாமலை
அண்ணாமலை வெளியிட்ட வீடியோ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், "திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பணப் பட்டுவாடா?
பணப்பட்டுவாடா பற்றி பேசுவதுபோல் அந்த வீடியோவில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் எ.வ.வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரிஜினல் வீடியோவை அமைச்சர் எ.வ.வேலு எங்கே கொடுக்கச் சொல்கிறாரோ அங்கே கொடுக்கிறோம், அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலை விட்டே விலக ரெடி
கோவை ஈச்சனாரி விநாயகர் கோயிலிலிருந்து பழனிக்கு, பாஜகவின் கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாதையாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதையாத்திரையை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "ஈரோடு கிழக்கு தொகுதியில், அமைச்சர் எ.வ.வேலு, 31ஆம் தேதிக்குள் பணம் கொடுத்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறார். நாளை மாநில தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவைக் கொடுக்கிறோம். அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு, எடிட் செய்யப்பட்டது என்று சொன்னால், அதை நிரூபித்து காட்டினால் நான் அரசியலைக் விட்டு விலகத் தயார்.
வன்கொடுமை சட்டம் பாயலையே
அதேபோல் சேலத்தில் திமுக நிர்வாகி ஒருவர் நடந்து கொண்ட விதத்தையும் அனைவரும் பார்த்திருப்பீர்கள். சமூகநீதி பற்றிப் பேச் திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்கள் மீது ஏன் வன்கொடுமை சட்டம் பாயவில்லை? திமுக அமைச்சர்கள், தங்கள் கட்சித் தொண்டர்களை நடத்தும் விதத்தை அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்." என விமர்சித்தார்.
2 நாளில்
மேலும் பேசிய அண்ணாமலை, "ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பாக ஒரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும். இரண்டு நாட்களில் இடைத்தேர்தல் தொடர்பாக பதில் கிடைக்கும். இந்த இடைத்தேர்தல், பாஜகவின் பலத்தை நிரூபிக்கின்ற தேர்தல் அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் பலத்தைக் காட்டுவோம்.
பிபிசி ஆவணப்படம் திரையிட்டால் தடுக்கம்மாட்டோம்
பிபிசி ஆவணப்படம் என்பது ஒரு பொய்ச் செய்தி. அதை தமிழ்நாட்டில் எங்கு திரையிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. தியேட்டரில் இந்த படத்தை திரையிட்டாலும் அதை யாரும் பார்க்க வரமாட்டார்கள். இதை எங்கு திரையிட்டாலும், தமிழ்நாடு பாஜகவினர் தடுக்க மாட்டோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், கே.என்.நேருவும் பணம் கொடுப்பது தொடர்பாக பேசிய வீடியோவை நாளை மாநில தேர்தல் ஆணையத்தில், பாஜக சார்பில் ஒப்படைக்க இருக்கிறோம். இந்த வீடியோ அனைத்து தொலைக்காட்சியிலும் வந்துள்ளது.
எங்கள் முதல்வர், எங்கள் ஆளுநர்
ஆளுநர் மாளிகையில் குடியரசு தின விழாவில், ஆளுநரும் முதல்வரும் கம்பீரமாக நடந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் சுமூக உறவில் தான் இருக்கிறார்கள். முதல்வர் எங்களுடைய முதல்வர். அதேபோல் ஆளுநர், எங்களுடைய ஆளுநர். நாங்கள் இருவரையும் விட்டுகொடுக்க மாட்டோம். இதில் சிலர் தேவையில்லாமல் இருவருக்கும் சர்ச்சை இருப்பது போல் பேசி வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
மோடி சொல்லிட்டாரு.. ரெடியாகுங்க.. அலெர்ட் செய்த அண்ணாமலை! பிப். 2 நைட்டே பட்ஜெட் ஹேண்ட்புக்.. ஓஹோ!