பீப் பிரியாணி விருந்துடன் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடி தீர்த்த கோவை பெரியாரிஸ்டுகள்!
கோவை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை பீப் பிரியாணி விருந்துடன் கோவையில் பெரியாரிஸ்டுகள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Recommended Video
உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தமிழ் உணர்வாளர்கள் கொண்டாடி வருகின்றனர். பேரறிவாளன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுத்து பிரியாணி திருவிழாவை ரத்து செய்ததை கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாகவும் கோவையில் பீப் பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
அண்மையில் நடைபெறவிருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில் இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பியதோடு இந்த திருவிழாவில் பீப் பிரியாணி வழங்க அனுமதி அளிக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாகவும் கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பெரியாரிய அமைப்புகள் சார்பில் பீப் பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆம்பூர் பிரியாணி திருவிழாவும், மாட்டுக்கறி சர்ச்சையும்: ரத்து செய்யப்பட்டது ஏன்?
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பீப் பிரியாணி விருந்து நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். இந்த பீப் பிரியாணி விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு பீப் பிரியாணி, பீப் கிரேவி மற்றும் கைமா வடை ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த விருந்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பீப் பிரியாணியை ருசித்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் பேரறிவாளன் விடுதலை கொண்டாடும் விதமாக இந்த விருந்து நடைபெற்று வருவதாகவும், இந்துத்துவ அமைப்புகள் கூறியதுபோல் பன்றி கறி பிரியாணி போட்டாலும் அதை சாப்பிடுவோம்; கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பன்றி கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் சுட்டிக் காட்டினார். கோவையில் பெரியாரிஸ்டுகள் பீப் பிரியாணி விருந்து நடத்தினால் பன்றி கறி விருந்து நடத்துவோம் என இந்துத்துவா அமைப்புகள் அறிவித்திருந்தன. அதனையே தமது பேட்டியில் சுட்டி காட்டினார் கோவை ராமகிருட்டிணன்.