பெண்ணை நிர்வாணமாக சித்தரித்து.. பணம் பறித்த மைனர் சிறுவர்கள்! மிரண்டுபோன கோவை
கோவை: கோவையில் சிறுவர்கள் மூன்று பேர் இணைந்து கொண்டு செய்த குற்றச்செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளது. அதேபோல மைனர் சிறார்கள் குற்றம் புரியும் ஷாக் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
அப்படித்தான் கோவையைச் சேர்ந்த இளம் சிறார்கள் சிலர் சேர்ந்து கொண்டு, செய்த குற்றச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பொள்ளாச்சி
கோவை பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஆடிட்டருக்கு திருமணம் ஆகி, 9 வயதில் மகன் உள்ளார். அவரது மகன் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார்ப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதே பகுதியில் உள்ள இந்தி ஆசிரியை ஒருவரிடம் டியூஷனுக்கு அனுப்பி உள்ளனர். தினசரி பள்ளி முடிந்த பின்னர், அங்கு இந்தி பயின்று வந்துள்ளான்.
நிர்வாணமாகச் சித்தரிப்பு
அந்த இந்தி ஆசிரியருக்கு மகன் ஒருவர் உள்ளார். +1 வகுப்பை அவர் பாதியிலேயே நிறுத்திவிட்டு பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் ஆன இரு 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணைந்து தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளனர். அதாவது தனது வீட்டிற்கு டியூஷனுக்கு வரும் 4ஆம் வகுப்பு மாணவரின் அம்மாவின் படத்தை மொபைல் மூலம் மார்பிங் செய்து நிர்வாணமாகச் சித்தரித்துள்ளனர்.
மிரட்டல்
இதை 4ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனிடம் காட்டி, பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்படிப் பணம் தரவில்லை என்றால் இந்தப் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்துவோம் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன அந்த சிறுவன், வேறு வழியின்றி வீட்டின் பீரோவில் இருந்து ரூ.40 ஆயிரம் ரொக்கத்தைப் பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளான்.
திருட்டு
அத்துடன் நிற்காமல் மேலும் அந்த சிறுவனிடம் அவர்கள் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் மாயமானதால், சிறுவனின் தந்தை பீரோவைப் பூட்டி உள்ளார். இதனால் சிறுவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பணம் கேட்டு அவர்கள் தொடர்ந்து மிரட்டியதால், வேறுவழியின்றி சிறுவன் தனது சித்தி வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளான்
புகார்
இதனிடையே மகனின் நடத்தை வழக்கத்தைக் காட்டிலும் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகம் கொண்ட சிறுவனின் தந்தை இது தொடர்பாகக் கேட்டுள்ளனர். அப்போது தான் சிறுவன் தந்தையிடம் என்ன நடந்தது என்பதை அழுது கொண்டே கூறி உள்ளேன். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, குற்றஞ்சாட்டப்பட்ட 3 மைனர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரில் புகார் அளித்து உள்ளார்.
கைது
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த3 மாணவர்களையும் பிடித்து விசாரணை செய்த போலசார், அவர்களின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீவ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.