திமுக இளம் பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா.. கோஷ்டி பூசல் காரணமா? “இதுக்கு மேல என்கிட்ட சக்தி இல்லை”
கோவை : பொள்ளாச்சி நகராட்சியின் 7வது வார்டு திமுக கவுன்சிலர் நர்மதா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் கவுன்சிலரான நர்மதா, பொறுப்பேற்ற 10 மாதத்திலேயே ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் திமுகவில் இருந்து விலகி, வேறு கட்சிக்கு செல்லப்போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் திமுகவின் இளம் கவுன்சிலர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் சொந்த காரணங்களுக்காக கவுன்சிலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நர்மதா ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உட்கட்சிப் பூசல் காரணமாகவே அவர் பதவியை ராஜினாமா செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்த 36 வார்டுகளில் 32ல் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றது. ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நகராட்சியை கைப்பற்றியது.பொள்ளாச்சி திமுக நகர செயலாளரின் மனைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

திடீர் ராஜினாமா
பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் திமுக பிரமுகர் கண்ணுச்சாமி என்பவரின் மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். நகர் மன்றக் கூட்டத்தில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட நர்மதா திட்டமிட்டிருந்த நிலையில், நகர்மன்றக் கூட்டம் 47 தீர்மானங்கள் மொத்தமாக நிறைவேற்றப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிவடைந்துள்ளது. இதையடுத்து, நகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை நர்மதா கண்ணுச்சாமி வழங்கினார்.

நர்மதா விளக்கம்
ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நர்மதா கண்ணுசாமி, "கடந்த 10 மாதங்களாக பொள்ளாச்சி நகராட்சி நகர்மன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த நான், எனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகல் கடிதத்தை நகராட்சி தலைவரிடம் அளித்துள்ளேன். நான் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் நகர் மன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கான களமல்ல. தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகுகிறேன். மக்களுக்கு என்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேறு சிறந்த களம் அமையும்.

உட்கட்சி பூசல்?
எனக்கு நகர்மன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் நன்றி. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமைந்திடும் வகையில் திமுகவின் செயல்பாடு இருக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். எனினும், உட்கட்சிப் பூசல் காரணமாகவே நர்மதா, தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ததாக பரவலாக பேசப்படுகிறது.

அதிருப்தி
நர்மதா நகர் மன்ற தலைவராக முன்மொழியப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சியாமளா அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த நர்மதா நகர் மன்ற கூட்டத்திலும், கட்சி கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது வார்டு பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை நகர்மன்ற தலைவர் தடுத்து வருவதாக கட்சி நிர்வாகிகளிடம் கூறி வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிகிறது.

சங்கடங்கள் இருக்கிறது
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நர்மதா, "கட்சி தலைமை சிறப்பாக இருக்கிறது. கீழ் மட்டத்தில் இருப்பவர்களால் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. தலைமை அதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், அதை சரியாக கொண்டு செல்வார் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இங்குள்ள அரசியலில் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஒரு கவுன்சிலராக இருந்து செய்வதை விட, இன்னும் பெரிய இடத்தில் அமர்ந்து செய்யலாம் என்று நினைக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேல் சக்தி இல்லை
மேலும் பேசியுள்ள அவர், "இளம் கவுன்சிலராக எனக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர். ஏதோ வந்தேன், போனேன் என்று இருக்கக்கூடாது என்பதற்காக என்னுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டுத்தான் போக வேண்டும் என்பதற்காக தான் இந்த காலத்தை எடுத்துக்கொண்டேன். அதை முடித்தும் விட்டேன். அதற்கான சக்தி இருந்ததால் செய்துவிட்டோம். இதற்கும் மேலும் செய்யும் சக்தி என்னிடம் இல்லை.

பாஜகவுக்கு செல்கிறேனா?
நான் பாஜகவுக்கு செல்லப் போவதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டதைப் பார்த்தேன். நான் ஒரு பெரியாரிஸ்ட். நான் வலதுசாரி கட்சிகளின் பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை. கட்சி மீது எனக்கு வருத்தமில்லை. இங்கு எனக்கான இடமில்லை என்பதால் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். சுதந்திரமாக செயல்பட இன்னும் நல்ல களம் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். நான் வேறு எந்த வேலைக்கும் போகவில்லை. எனக்கு எந்த சிபாரிசும் தேவையும் இல்லை. நான் மீண்டும் யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சிக்கப் போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications