மருதமலைக்கு காரில் மட்டும் போயிடாதீங்க.. பொங்கலை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கருதப்படுகிறது. கோவை மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு கோவை மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் வருவது வழக்கம்.

கேரள மாநில மக்கள் பழனிக்கு அடுத்தபடியாக எந்தவொரு நல்ல காரியங்களானாலும் மருதமலைக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்வர். முருக பக்தர்களுக்குப் பிடித்த கோயில்களில் டாப் 10 பட்டியலில் மருதமலை கட்டாயம் இடம்பிடித்திருக்கும். மருதமலை மேல் அமைந்துள்ள முருகப்பெருமானின் கோயில் அந்த காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.
மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் மருதமலை கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மருதமலை கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மலைப் பாதையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் திரளான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் பக்தர்கள் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மலைப்பாதையில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 19 ஆம் தேதி வரை பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட நாட்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இரண்டு சக்கர வாகனங்கள், மலைப்படிகள், கோயில் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களது பயணங்களை முன்னேற்பாடு செய்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications