அங்கு இருந்ததே 4 பேர் தான்.. வீடியோவை வெளியிட்ட நபர் யார்? பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ் பரபர!
கோவை: அன்னபூர்ணா சீனிவாசன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரத்தை தொடர்ந்து கண்டனங்கள் வலுத்த நிலையில் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ், பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். தான் நீக்கப்பட்டது குறித்து சதீஷ் பேட்டி அளித்துள்ளார்.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து அன்னபூர்ணா உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், வீடியோ வெளியான விவகாரம் குறித்து கட்சியில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பியதாக சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் குற்றம்சாட்டப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரின் அனுமதி பெற்று, சிங்காநல்லூர் மண்டல தலைவர் சதீஷ் மீது பாஜக மாவட்டத் தலைவர் ரமேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சதீஷ், செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியுள்ள அவர், "நான் கடந்த 20 வருடங்களாக பாஜகவில் கிளை தலைவர் முதல் மண்டல தலைவர் வரை பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். கடந்த 31 ஆம் தேதியோடு சிங்காநல்லூர் மண்டல தலைவராக எனது பதவிகாலம் முடிந்துவிட்டது. முடிந்த பதவியைத்தான் மாவட்ட தலைவர் இப்போது நீக்கியுள்ளார்.
என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து மாவட்ட தலைவர் நீக்குவதற்கு அதிகாரம் இல்லை. மத்திய அமைச்சரை அன்னபூர்ணா அதிபர் சீனிவாசன் சந்தித்தபோது மொத்தமே நான்கு பேர் தான் இருந்ததாக தகவல் வந்துள்ளது. அந்த வீடியோவை எடுத்ததே மாவட்ட தலைவர் தான் என்கிறார்கள்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன், அன்னபூர்ணா சீனிவாசன், பாஜக மாவட்ட தலைவர் ஆகிய 4 பேர் தான் அங்கு இருந்துள்ளனர். அவர்களில் 3 பேர் வீடியோவில் உள்ளனர். அப்படி என்றால் வீடியோவை எடுத்து வெளியிட்டது யார்?
இதுசம்பந்தமான கேள்வி கேட்டு ஒரு ஃபார்வர்டு மெசேஜ் வந்தது. இது உண்மையா எனக் கேட்பதற்காக சக நிர்வாகிக்கு ஃபார்வர்டு செய்தேன். மெசேஜை ஃபார்வர்டு செய்த என்னை நீக்கினீர்கள் என்றால், வீடியோவை வெளியிட்டவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
அவர்கள் தப்பிப்பதற்காக என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் வந்தபிறகு, நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை அவரிடம் நிரூபித்து மீண்டும் கட்சியில் இணைவேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் கோவை பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை, கொடிசியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களுக்கு இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பேசுகையில், "ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு 5% ஜிஎஸ்டி. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது." என்றார்.
அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. பலரும் மத்திய பா.ஜ.க அரசையும் ஜி.எஸ்.டி வரியையும் விமர்சித்து வந்தனர். இந்தச் சூழலில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும், அன்னப்பூர்னா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அன்னபூர்ணா சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். இந்தச் சூழலில் தான் பாஜக நிர்வாகி சதீஷ் நீக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications