காரில் ரகசிய அறை.. திறந்து பார்த்தால் கட்டுக்கட்டாக பணம்.. ரூ 90 லட்சம் பறிமுதல்.. பின்னணி என்ன?
கோவை: கோவை அருகே கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்ட நிலையில் அந்த காரில் ரகசிய அறையில் ரூ 90 லட்சம் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 50 வயதான அப்துல் சலாம். கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்றுள்ளார்.
காரை அவரது டிரைவர் சம்சுதீன் ஓட்டிச் சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் கோவை நவக்கரை அருகே வந்துள்ளது.
27 லட்சம் பணம்
அப்போது அப்துல்சலாமின் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் ஆள் இல்லாத இடமாக பார்த்து அப்துல்சலாமின் காரை மடக்கி நிறுத்தியது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மகும்பல் அப்துல்சலாமை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து 27 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது.
2 செல்போன்
அப்துல்சலாமையும் அவரது டிரைவரையும் தாக்கிவிட்டு கீழே தள்ளிய அந்த கும்பல் அவர்களது 2 செல்போன்களையும் பறித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்றது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து கேஜி சாவடி போலீஸாரிடம் அப்துல் சலாம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இரு செல்போன்கள் பறிமுதல்
இந்த நிலையில் கோவை- சிறுவாணி சாலையோரத்தில் ஒரு கார் கேட்பாரற்று கிடந்தது. அது அப்துல் சலாமின் கார் என தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரத்தில் இருந்த பேரூர் பச்சாபாளையம் சாலையோரம் இருந்த இரு செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட காரை தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
ரூ 90 லட்சம் பணம்
அப்போது காரின் பின் இருக்கையின் கீழ் காரின் கதவுகளால் ரகசிய அறைகள் இருப்பதை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த அறையை திறந்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது. ரூ 90 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அடிக்கடி
இதுகுறித்து அப்துல்சலாமிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கடத்தப்பட்ட பணம் கேரளா மலப்புரத்தை சேர்ந்த நகைக் கடை அதிபர் முகமது அலி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் முகமது அலி சொல்லும் இடத்தில் இது போன்று பணத்தை அப்தலு சலாம் அடிக்கடி கொடுத்து வருவதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பரபரப்பு
இவை ஹவாலா பணமா, இந்த பணத்திற்கும் சலாமிற்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 90 லட்சம் பணத்தை அமலாக்கத் துறையினரிடம் வழங்கிய போலீஸார் கார் கடத்தல் வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.