எடப்பாடி குறித்த கேள்வி.. சிரித்துக் கொண்டே நழுவிய செங்கோட்டையன்
கோவை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் கோவை விமான நிலையத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கிளம்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக சட்டப் பேரவை உறுப்பினருமான செங்கோட்டையன் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
கட்சியில் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனின் செயல் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதிருப்தி தெரிவித்தது, அதிமுக மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
இதைத்தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளும் செங்கோட்டையனை காண அவரது இல்லத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், வழக்கமாக சந்திப்பு தான் என்றும் அந்தியூரில் இருந்து பலர் அழைப்பிதழ் வழங்க வந்திருந்தனர் என்றும் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டங்களில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை தெரிவிக்காமல் தொடர்ந்து செங்கோட்டையன் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த செங்கோட்டையன் இன்ற காலை கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். ஈரோடு செல்வதற்காக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தீர்களா? என்று கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சிரித்தபடி நழுவிச் சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications