காலியான எடப்பாடி பழனிசாமி இமேஜ்.. செங்கோட்டையன் மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணமே அதுதான்!
கோவை: எடப்பாடி பழனிசாமியின் இமேஜை டேமேஜ் செய்ததே அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தது எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார். செங்கோட்டையன் பேசுகையில், நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என்று யாராலும் சொல்ல முடியாது. அதனால் ஒருங்கிணைப்பு பணிகளை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. அப்படி செய்யவில்லை என்றால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.

இந்த பிரச்சனைக்கு முடிவு வந்தால் தான் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்வேன். தென் மாவட்டங்களில் என்ன நிலை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். 10 நாட்கள் காலக்கெடு. அதற்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து தேனியில் சுற்றுப்பயணத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இந்த நிலையில் திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின், அதிமுகவில் செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பொறுப்புகளில் இருந்து விடுக்கப்பட்டார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பொறுப்புகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டம் மூலமாக, ஒரு இமேஜ் உருவாகி வந்தது.
திமுக மீது அதிருப்தியில் இருப்பவர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியை திரும்பி பார்த்தனர். அதிமுகவுக்கு ஒரு நல்ல மைலேஜ் கிடைத்த நிலையில், செங்கோட்டையன் நேரடியாக எடப்பாடி பழனிசாமியின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. கட்சியின் தலைவருக்கு அமைப்புச் செயலாளர் கெடு விதித்ததை எடப்பாடி பழனிசாமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்த கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழும். ஜெயலலிதாவிற்கு எதிராக யார் ஒரு வார்த்தை கூட அதிமுக நிர்வாகிகள் பேச மாட்டார்கள். தற்போது ஜெயலலிதா இடத்திற்கு வந்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகி ஒருவர் கெடு விதித்தது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் செங்கோட்டையன் மட்டுமல்லாமல் அவரின் ஆதரவாளர்களின் பதவியையும் மொத்தமாக பறிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications