சிபிஐ விசாரணை உத்தரவு.. செந்தில் பாலாஜி கொடுத்த தில்லான விளக்கம்
கோவை: செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்த 2021-2023 காலகட்டத்தில், மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது செந்தில் பாலாஜிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அதிமுக, பாஜகவினர் நம்புகிறார்கள். இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மின்மாற்றிகள் கொள்கைகள் முறைகேடு நடந்திருப்பதாக ஒரு அமைப்பு புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மின்மாற்றிகள் கொள்முதல் பின்பற்றும் நடைமுறைகள் வழக்கமானது. டெண்டரில் பலர் கலந்து கொண்ட நிலையில், குறிப்பிட்ட சிலர் ஒரே தொகை குறிப்பிட்டுள்ளனர்.

சிபிஐ விசாரணை
டெண்டர் தொடர்பாக மூன்று குழுக்கள் தான் இறுதி செய்யும். மின்மாற்றி கொள்முதலில் கடந்த காலங்களில் பின்பற்றும் முறை தான் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணை முகாந்திரம் இருப்பது குறித்து முழுமையான உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான முழு உத்தரவு வந்த பிறகு விளக்கமளிக்கிறேன். சில கட்சிக்கு ஆதரவாக சிபிஐ விசாரணையை நெருக்கடிக்கு உத்தவிட்டுள்ளனர்.
1987 ஆண்டில் இருந்து இந்த நடைமுறையை தான் அரசு பின்பற்றுகிறது. 2021 ஆண்டில் மட்டும் புகார் அளிப்பதற்கு அரசியல் அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது போடப்பட்ட வழக்குகளை ஏன் தொடர்ந்து நடத்தவில்லை. வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டை என் வழக்கறிஞர்களுடன் பேசி முடிவெடுப்போம்.
முறைகேடு நடைபெறவில்லை
மின்மாற்றிகள் விஷயத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. இதில் அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் ஏற்படவில்லை. சிபிஐ விசாரணை நியாயமா என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாதவர்கள், இதுபோன்ற வழக்குகள் பின் செல்கிறார்கள். அதிமுகவினர் கோவையில் என்னை வெளியூர்காரன் என்று சொல்கிறார்கள். கடந்த 4 வருடங்களாக கோவையில் தான் பணி செய்துள்ளேன்.
தமிழ்நாட்டின் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைத்துள்ளோம். மேற்கு மண்டலத்தில் 35 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். கோவை தெற்கு தொகுதியில் உள்ள 11 வார்டுகளில் அலுவலகம் அமைப்பதற்காக இடம் பார்த்து வருகிறேன். விரைவில் அலுவலகம் அமைக்கப்படும்.
தேர்தலில் வெற்றி
நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக தான் வரும். கரூரில் 41 பேர் உயிரிழந்த போது விட்டுவிட்டு ஓடியவர்களை பற்றி பேச விரும்பவில்லை. அந்த துக்க சம்பவம் நடைபெற்றவுடன் நான் தான் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் நின்றேன்" என்றார்.












Click it and Unblock the Notifications