அண்ணாமலைக்கு பக்கத்தில்.. ஆர்.எஸ்.எஸ் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
கோவை: ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், எஸ்பி வேலுமணியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் 24-வது பேரூர் ஆதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவையொட்டி பேரூர் ஆதீன மடத்தில் பாரம்பரிய சிவ வேள்வி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.
இந்து முன்னணி சார்பில் நேற்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பாஜக தலைவர்கள், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையிலான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. திராவிடத்திற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில், கட்சிப் பெயரிலேயே அண்ணாவையும், திராவிடத்தையும் கொண்டுள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டது வெட்கக்கேடான செயல் என திமுக விமர்சித்துள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக தலைவர்கள் உடன் பங்கேற்றிருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்வில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், எஸ்பி வேலுமணியும் அருகருகே அமர்ந்திருந்தது விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
மேலும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சிறிய முருகன் சிலை ஒன்றைப் பரிசாக அளித்தார். எஸ்.பி.வேலுமண்யின் சகோதரர் அன்பரசன் முருகனின் வேல் ஒன்றை மோகன் பகவத்துக்கு பரிசளித்தார்.












Click it and Unblock the Notifications