"பாஜகவில் இருந்து.. சில தலைவர்கள் விலக இது மட்டும் தான் காரணம்.." விளக்கம் கொடுக்கும் அண்ணாமலை
கோவை: உத்தரப் பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வரும் சூழலில், இது தொடர்பாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
உலக தமிழர்கள் அனைவராலும் பொங்கல் விழா கடந்த 3 நாட்களாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கொரோனா அதிகரித்துள்ள நிலையில், அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி கோவை செல்வபுரம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்ணைக் கட்டிக்கொண்டு உறியடி விளையாட்டில் பங்கேற்று பானையை அடித்து உடைத்தார்.
7 எழுத்து நடிகையின் பரபரப்பு புகார்.. நட்சத்திர தம்பதி பிரிந்த பின்னணி?
சமத்துவ பொங்கல்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "சமத்துவ பொங்கலை இன்று கொண்டாடுகிறோம். இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாகப் பொங்கல் விழாவை நடத்துகிறோம், திருவள்ளுவர் உண்மையான ஹிந்து முறைப்படி வாழ்ந்தவர். திமுக மத அரசியலைக் கையில் எடுத்துள்ளது. நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு
வஉசி, வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரை வேண்டுமென்றே புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து இல்லை. இந்த விவகாரத்தில் நடந்ததே வேறு. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகளை இறுதி செய்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைக்கும் இந்தக் குழு தான் எந்த ஊர்திகள் பங்கேற்கும் என்பதை இறுதி செய்யும்.
என்ன காரணம்
அந்த குழு அளிக்கும் ஆலோசனைகளின்படியே முடிவு எடுக்கப்படும், இது தொடர்பாக மத்திய அரசிடம் கேட்டு உரிய விளக்கத்தை அளிப்போம். கேரளாவின் ஊர்தியில் ஆதி சங்கரர் படம் இடம்பெறக்கூடாது என அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதால் நாராயண குருவின் படமும் இடம்பெறவில்லை. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் நேரம் கருதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநில அரசு ஊர்திகளும் பங்கேற்க முடியாது.
ரியாலிட்டி ஷோ
தனியார் சேனில் நடைபெற்ற குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோவை கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது குழந்தைகளைப் பாதுகாக்கும் NCPR விதிமுறைகளுக்கு எதிரானது. இது தொடர்பான அந்த சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை நாங்கள் சட்ட ரீதியாகவே எதிர்கொள்கிறோம். கோவையில் 30 சாலைகளில் வாகனம் நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது இதைக் கண்டித்து வரும் 21ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம்.
உத்தரப் பிரதேசம்
உத்திரப் பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்பதிலும் சாதி ரீதியில் அரசியல் செய்யக்கூடாது என்பதிலும் பாஜக தெளிவாக உள்ளது. இதனால் அதிருப்தி அடையும் சிலர் தான் பாஜகவில் இருந்து விலகிச் செல்கின்றனர். ஆனால், இதையெல்லாம் தாண்டி உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக நிச்சயம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்!
பாஜக - அதிமுக கூட்டணி
தற்போது வரை பாஜக - அதிமுக கூட்டணி சிறப்பாக உள்ளது. எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை. மாறாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கூடாரம் காலியாகவுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்கிறார். இது குறித்து திமுக எதையும் கூற மறுக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகள் பறிபோகும்" என்று அவர் தெரிவித்தார்.