கோவையில் ஆப்பு வைத்த ஐடி கம்பெனி.. கலெக்டர் ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஊழியர்கள்
கோவை: கோவை தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை வெள்ளிக்கிழமை இரவில் திடீரென மெயில் அனுப்பி வேலையை விட்டு நீக்கியுள்ளதாக கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வேலைக்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலும் இருந்து கோவை மாவட்டத்துக்கு வந்து இளைஞர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். ஐடி நிறுவனங்களில் லே ஆஃப் எனும் திடீரென வேலையை விட்டு நீக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பதால் இளைஞர்கள் பெரும்பாலும் ஐடி நிறுவனங்களில் பணியாற்றவே விரும்புகின்றனர்.

ஆரம்பகட்டத்தில் கைநிறைய சம்பளம், சலுகைகள் என பல விஷயங்கள் இருந்தாலும், திடீரென வேலை நிறுத்தம் செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதேபோல, கோவை தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை வெள்ளிக்கிழமை இரவில் திடீரென மெயில் அனுப்பி வேலையை விட்டு நீக்கியுள்ளதாக கூறியுள்ள சம்பவத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் செய்வதறியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில், திடீரென இந்த இளைஞர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் மற்றும் சுங்கம் பகுதியில் ஃபோகஸ் எடுமேட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அமெரிக்க நாட்டைச் சார்ந்த இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான பணியாளர்களை எந்தவித முன்னறிவிப்புமின்றி வேலையை விட்டு நீக்கி உள்ளது அந்த நிறுவனம்.
இந்நிலையில் திடீரென நீக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மூன்று மாத கால சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும், 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு செட்டில்மென்ட், கிரேடுவிட்டி, உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என கோரி அந்நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும், நிறுவனம் மூடப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை இரவில் மின்னஞ்சல் மட்டும் வந்தது. ஆனால், திரும்பவும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நடப்பு மாதத்தில் சம்பளம் மற்றும் வேலை நீக்கத்திற்கான காரணத்தை தெரிவித்து அதற்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். பணியில் இருந்து விலகாத நிலையிலும் அனைவருக்கும் விடுப்பு ஆணை அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், இங்கு பணியாற்றிய ஊழியர்கள் Abscond என குறிப்பிட்டு இருப்பதால் அடுத்த பணி இடத்தில் வேலைவாய்ப்பு பெறுவதில் எங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications