பொள்ளாச்சி பயிற்சி மருத்துவர் செய்த அசிங்கம்..அலறிய பெண் மருத்துவர்கள், செவிலியர்கள்.. நடந்தது என்ன?
கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தி வரும் கழிவறையில் பேனா வடிவிலான கேமரா வைத்து பயிற்சி மருத்துவர் கண்காணித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பயிற்சி மருத்துவர் வெங்கடேஷை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிவறை தனியாக உள்ளது. இந்நிலையில், பெண் செவிலியர் ஒருவர் நேற்று கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வித்தியாசமாக பேனா வடிவிலான பொருள் ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது பென் கேமரா என்பது தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கழிவறையில் பென் கேமரா வைக்கப்பட்டிருந்தது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கழிவறையில் ரகசிய கேமராவை வைத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்த வெங்கடேஷ் என்பவர் கேமரா வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவரான பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (33) என்பவர் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசியமாக பேனா வடிவிலான கேமராவை வைத்து கண்காணித்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பயிற்சி மருத்துவர் வெங்கடேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் கோவையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததும், பொள்ளாச்சி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஷ் மற்ற மருத்துவமனையில் இதுபோன்று வேற ஏதாவது பகுதியில் கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகிறாரா, ஏற்கனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications