கோவை அருகே.. தடுப்பூசிக்கு பயந்து.. மரத்தின் மீது ஏறி தப்பிய மக்கள்.. காட்டுக்குள்ளும் ஓட்டம்
கோவை: கோவை அருகே, தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு தப்பி, பழங்குடியின மக்கள் மரத்தின் மீது ஏறி அடம் பிடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Recommended Video
கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தற்போது தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை போடப்படும் ஊசிக்கு இரவே சென்று இடம் பிடித்துக் கொள்ளும் நிலையும் உள்ளது.
அதே சமயத்தில் மலை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தடுப்பூசியை கண்டு அஞ்சும் நிலையும் உள்ளது.

மலைவாழ் மக்கள்
இந்த நிலையில், தொண்டாமுத்தூரையடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமத்திற்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றனர். இவர்களை கண்ட கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிலர் தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் மரத்தில் ஏறிக் கொண்டனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறைந்த எண்ணிக்கை
சுமார் 600 வாக்காளர் உள்ள அந்த கிராமத்தில் வெறும் 57 பேரும், 90 பேர் இருந்த கிராமத்தில் வெறும் 7 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அந்த மக்களின் வீடுகளுக்கே சென்றதோடு, தடுப்பூசி செலுத்தி கொள்ள அழைப்பு விடுத்தனர். அதே போல மரத்தின் மீது ஏறிய இளைஞர்களையும் அழைத்தனர்.

நிபந்தனை போட்ட மக்கள்
இன்று, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வரும் நாட்களில், பாதிப்பு ஏற்படவில்லை என்றால் நாங்களும் தடுப்பூசி செலுத்தி கொள்கிறோம் என்று பழங்குடியின கிராம மக்கள் கூறி சென்று விட்டனர். இதனால் எடுத்துச் சென்ற தடுப்பூசிகள் மீண்டும் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தடுப்பூசி விழிப்புணர்வு
நகர பகுதிகளில் தடுப்பூசி செலுத்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், பழங்குடியின மக்கள் தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்ட சம்பவம், தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடையவில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.












Click it and Unblock the Notifications