கோவை வாக்குச்சாவடிக்குள் குடிபோதையில்.. கட்சி கொடியுடன் நுழைய முயன்ற தவெகவினர்.. அலுவலர்களுடன் ரகளை
கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தேர்தல் பணிகளில் ஆங்காங்கே சலசலப்புகளும் ஏற்பட்டன. கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் வாக்குச்சாவடியில் தவெகவினர் குடிபோதையில் உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். மேலும் அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் பூத் ஏஜென்ட்களிடம் அவர்கள் ரகளை செய்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் அமைதியாக தான் நடைபெற்றது. சில வாக்குச்சாவடிகளில் மட்டும் பிரச்சனைகள், சலசலப்பு ஏற்பட்டது. கோவையின் முக்கியமான தொகுதியில் தவெகவினர் ரகளை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை தவெக பிரச்சனை
கோவை சூலூர் தொகுதியில் திமுகவில் தளபதி முருகேசன், அதிமுகவில் கந்தசாமி, தவெகவில் சுகுமார், நாம் தமிழரில் ராஜசேகரன் போட்டியிட்டுள்ளனர். சூலூர் தொகுதியில் அத்தப்பகவுண்டன் புதூர் பகுதி உள்ளது. அத்தப்பன்கவுண்டன்புதூர் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 168 மற்றும் 169 ஆகிய இரண்டு வாக்கு சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
சூலூர் தொகுதியில் 88.31 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. நேற்று அங்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு தவெக நிர்வாகிகள் சிலர் குடிபோதையில் தங்களது கட்சிக் கொடியுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். தேர்தல் விதிகள்படி, வாக்குச்சாவடி மையத்திற்குள் கட்சி அடையாளங்களுடன் நுழைவதற்கு அனுமதியில்லை.
அலுவலர்களுடன் மோதல்
தேர்தல் விதிமுறைகளை மீறி தவெக கொடியுடன் உள்ளே நுழைய முயன்றவர்களை, அங்கிருந்த பூத் ஏஜென்ட் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த தவெகவினர், அங்கிருந்த பூத் ஏஜென்ட்டையும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலரையும் தாக்க முயற்சி செய்துள்ளனர்.
இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகாத வார்த்தைகள் பேசியபடி வாக்குசாவடிக்குள் நுழைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்களிடம் ரகளை செய்தனர். அங்கு பணி செய்த தேர்தல் அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ரகளை பரபரப்பு
இந்நிலையில் வாக்குசாவடியில் ரகளையில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இளைஞர்கள் ரகளை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.














Click it and Unblock the Notifications