ஆவின் டிலைட் பாலை திணிப்பதா? என்ன ஒரு அக்கறை.. மறைமுக விலை உயர்வு.. கொதிக்கும் வானதி சீனிவாசன்
கோவை: ஆவின் நிறுவனம் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை மாற்றி அதற்கு மாற்றாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் திணிப்பது தான் மக்கள் மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25 ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பாலை மாற்றி அதற்கு மாற்றாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட்டை திணிப்பது தான் மக்கள் மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை என்பதை தெளிவாக காட்டுகிறது
ஆவின் நீலம், பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பால்களுடன் கூடுதலாக அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதற்கு பதில் டிலைட் பாலை அறிமுகம் செய்திருக்கக் கூடாது.ஊட்டச்சத்தையும் குறைத்து விலையையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல.
இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக திரும்பபெறவேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட் பச்சை, ஊதா, ஆரஞ்ச், வயலட் என பல வண்ணங்களில் கிடைக்கிறது. பெரும்பாலானோர் விலை குறைவாக உள்ள ஊதா, பச்சை நிற பால் பாக்கெட்டுகளையே வாங்குகின்றனர். இந்த நிலையில்தான் பச்சை நிற பால் வரும் 25ம் தேதி முதல் சில்லரை விநியோகம் நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4.5 கொழுப்பு சத்தள்ள பாலை லிட்டர் ரூ.44க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து வருகிறது.
இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 25ம் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். அட்டைதாரர்கள் டிசம்பர் 15ம் தேதி வரை பச்சை நிற பால் வழங்கப்படும் என ஆவின் நிறுவன அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications