கோவை பாஜக கூட்டணியின் கோட்டை! செந்தில் பாலாஜி வந்தாலும் அசைக்க முடியாது - வானதி சுளீர் பேட்டி
கோவை: கோவை மாவட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டை என்றும் அங்கு திமுகவின் தந்திரங்கள் பலிக்காது எனவும் கூறுகிறார் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன்.
அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட யாரை அனுப்பினாலும் கோவை மாவட்டத்தில் திமுகவின் முயற்சிகள் தோல்வியில் தான் முடியும் என உறுதிப்படக் கூறுகிறார் அவர்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டிருப்பதை பற்றிய தங்கள் கருத்து என்ன..?
பதில்: கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாத காரணத்தால் அவரை வெறும் பொறுப்பு அமைச்சராக மட்டுமே நான் பார்க்கிறேன். அவரது வரவால் கோவை மாவட்டத்தில் திமுக வெற்றிபெறப் போவதில்லை. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டையாக திகழ்கிறது. இதனால் செந்தில்பாலாஜியை போல் இன்னும் எத்தனை அமைச்சர்கள் கோவைக்கு அனுப்பப்பட்டாலும் திமுகவின் முயற்சிகள் பலிக்காது.
கேள்வி: கூட்டணி தேவையில்லை தனித்து போட்டியிட வேண்டும் என, அதிமுக தலைமைக்கு அன்வர் ராஜா விடுத்துள்ள வேண்டுகோளை எப்படி பார்க்கிறீர்கள்..?
பதில்: இவரை போல் ஒவ்வொரு நிர்வாகிகளின் கருத்துக்கும் நான் பதில் அளிக்க விரும்பவில்லை. கூட்டணி என்பது இரண்டு கட்சிகளின் தலைமை முடிவு செய்ய வேண்டிய விவகாரம். இதனால் இதற்கு நான் பதில் அளிக்க வேண்டாம் எனக் கருதுகிறேன்.
கேள்வி: பாஜகவை தொட்டால் திமுகவுக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம் என அண்ணாமலை கூறுகிறார், இது மிரட்டல் அல்லவா..?
பதில்: அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீதும் பாஜக மீதும் திமுகவினர் சுமத்தி வருகிறார்கள். திமுக அமைச்சர்களின் அநாகரீகமான பேச்சுக்களுக்கு எங்கள் கட்சித் தலைவர் பதில் அளித்திருக்கிறார். அவ்வளவு தான், இதில் மிரட்டுவதற்கு ஒன்றுமில்லை.
கேள்வி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது, இதற்கு தீர்வே கிடையாதா..?
பதில்: கடந்த 7 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. இப்போது நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகளுக்கு கூட மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை இலங்கைக்கு பதிவு செய்திருக்கிறது. ராஜ்கிரண் என்ற மீனவர் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார். நானும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பேசியிருக்கிறோம். எனவே, மீனவர்கள் பிரச்சனைகளை மிகுந்த கவனத்துடன் மத்திய அரசு கையாள்கிறது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
கேள்வி: பெட்ரோல், டீசல், விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் இல்லையா..?
ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல உமிழ்நீர் கடத்தல்... நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட இருவர் கைது..!
பதில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்சனை என்பது நாட்டுக்கு புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதே போன்று ஒரு விலை உயர்வை நாடு சந்தித்தது. எந்தவொரு தொலைநோக்கும் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம் நாம் இன்று சிரமப்படுகிறோம். சர்வதேச சந்தையில் விலை உயர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆக, இந்த விலை உயர்வு என்பது தற்காலிகமானது தான். நிச்சயம் பிரதமர் மோடி இதற்கான தீர்வை வழங்குவார்.