கோவை 50 வயது வரை கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த நண்பர்கள்.. திடீரென வந்த மனைவி.. முடிந்த வாழ்க்கை
கோவை: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கருவிசேரி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் , மகேஷ் ஆகிய 2 பேருமே சிறுவயது முதலே நண்பர்கள் ஆவர். இவர்களுக்கு 50வயது நெருங்கிவிட்டது. இவர்கள் கோவையில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்கள். இதில் மகேஷ் அந்த பகுதியில் ஒரு பெண்ணை அண்மையில் காதலித்து திருமணம் செய்தார். அந்த பெண்ணுடன் மகேஷ் தனிக்குடித்தனம் போக விரும்பி உள்ளார். இது அவர்களுக்குள் நினைத்து பார்க்க முடியாத சிக்கலை உண்டாக்கி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கருவிசேரி பகுதியை சேர்ந்த 50 வயதாகும் ஜெயராஜ், 45 வயதாகும் மகேஷ் ஆகிய 2 பேருமே சிறுவயது முதலே நண்பர்கள் ஆவர்.இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் 2 பேரும் சேர்ந்துதான் போவார்களாம். 2 பேரும் கோவை வந்து பேக்கரி வைக்க முடிவு செய்தார்கள். அதன்படி கோவையை அடுத்த துடியலூர் அருகே சேரன் காலனி செல்லும் வழியில் பேக்கரி வைத்து நடத்தி வந்தனர். பேக்கரியை பார்த்துக் கொள்வதற்காக துடியலூர் அருகே உள்ள விசுவாசபுரத்தில் வீடு எடுத்து 2 பேரும் சேர்ந்து தங்கி இருந்தார்கள்..

தினமும் காலையில் 2 பேரும் பேக்கரிக்கு வந்துவிட்டு இரவில் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு பேக்கரியை பூட்டிவிட்டு சாவியை ஊழியர்கள் கையில் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் நேற்று காலை 11 மணி ஆன பின்னரும் பேக்கரிக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள், 2 பேரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே ஊழியர்கள் விசுவாசபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே சந்தேகம் அடைந்த ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மகேஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதே அறையில் ஜெயராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
நண்பர்கள் இருந்த கோலம்
அதன்பேரில் விரைந்து சென்ற துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் ஜெயராஜ், மகேஷ் ஆகியோருக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறதாம். இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகேசின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு உயிரைவிட்டது தெரியவந்தது.
காதல்
இது குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிய வந்த தகவலின்படி, ஜெயராஜூம், மகேசும் சிறுவயது முதலே நண்பர்கள் ஆவர். 50 வயது ஆகியும் ஜெயராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் மகேசுக்கு அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்தார்களாம்.
திருமணம்
அதை அறிந்த ஜெயராஜ், ஏற்கனவே அந்த பெண் திருமணமானவர் என்பதால், அந்த பெண்ணிடம் பேச வேண்டாம் என்றாராம். அதற்கு மகேஷ், அந்த பெண்ணை தான் திருமணம் செய்ய உள்ளதாக கூறினார். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு முன்பு மகேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதை அறிந்த ஜெயராஜ் தனது நண்பரான மகேசை கண்டித்திருக்கிறார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.
தனிக்குடித்தனம்
இதற்கிடையே, நேற்று முன்தினம் பேக்கரியை பூட்டிவிட்டு 2 பேரும் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். அங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு, 2 பேரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது மகேஷ், தனக்கு திருமணம் முடிந்துவிட்டதால், மனைவியை துடியலூர் அழைத்து வந்து தனிக்குடித்தனம் செல்வதாக கூறினாராம்.
முடிந்த வாழ்க்கை
மேலும் வாடகைக்கு வீடு எடுக்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் தனக்கு பணம் தேவைப்படுவதால் கொடுக்குமாறு ஜெயராஜிடம் மகேஷ் கேட்டாராம். அப்போது ஆத்திரம் அடைந்த ஜெயராஜ் எனக்கு பிடிக்காத பெண்ணை நீ திருமணம் செய்து உள்ளாய். எனவே நான் உனக்கு பணம் தரமுடியாது என்று கூறியதுடன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மகேஷை கொன்றுவிட்டாராம். தன்னை போலீசார் பிடித்துவிடுவார்கள் என்று பயந்துபோன ஜெயராஜ், அதே வீட்டில் தூக்கிட்டு உயிரைவிட்டது தெரியவந்தது. இதுபற்றி மேலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications