அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்குக்கும் என்னங்க சம்பந்தம்? கூலாக கேட்ட உதயநிதி.. களத்தில் இறங்கிட்டாரே!
கோவை விமான நிலையத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கோவை : ஈரோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுகவினர் மக்களை அடைத்து வைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு, அவ்வாறு எதுவும் இல்லை, அது பொய்யான குற்றச்சாட்டு எனத் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. சில நாட்களில் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
இன்றும், நாளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

உதயநிதி பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அதேபோல முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார்.

உற்சாக வரவேற்பு
ஈரோடு பிரச்சாரத்திற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டு, அங்கு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக விமர்சிக்கப்படுவது பற்றிய கேள்விக்கு, எது எப்படி இருந்தாலும் மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள் என பதில் அளித்தார். மேலும் திமுகவினர் மக்களை அடைத்து வைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு, அவ்வாறு எதுவும் இல்லை, அது பொய்யான குற்றச்சாட்டு என்றார்.

பொறுத்திருந்து பாருங்க
திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என அதிமுகவினர் விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பொறுத்திருந்து பார்க்கலாம் என பதிலளித்தார்.

அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து அண்ணாமலையிடம் கேளுங்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் என எதிர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications