திமுக Vs அதிமுக: கோவை மாவட்டத்திற்கு அதிக திட்டங்கள் கொடுத்தது யார்.. பட்டியல் இதோ!
கோவை: தமிழ்நாடு அரசியலில் கோவை மாவட்டம் எப்போது மிகவும் வித்தியாசமானது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ் கட்சியும் வலுவாக இருந்தப் பகுதி. தற்போது அங்கு அதிமுக - பாஜக பலமாக இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக திமுகவும் கோவை மாவட்டத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அவிநாசி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை வைத்தும் அரசியல் ரீதியாக விவாதமாகியுள்ளது. கோவை மாவட்டத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்தது யார். திமுக, அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொகுப்பு இதோ.
கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு என்றுபெயரிட்டு ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அப்போதே பணிகள் தொடங்கிவிட்டன. கோவைக்கு புதிதாக எந்தத் திட்டத்தையும் கொடுக்காமல் தங்களின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக செய்வதாக அதிமுக புகார் கூறுகிறது.

கோவை அரசியல்
அதேநேரத்தில் தேர்தலில் தாங்கள் கோவையில் வெற்றி பெறாவிடினும் அதிகளவு திட்டங்களை நிறைவேற்றுவதாக திமுக கூறி வருகிறது. கோவையை பொறுத்தவரை கடந்த 35 வருடங்களில் 1996 சட்டசபை தேர்தலில் மட்டுமே திமுக கோவையில் வெற்றி பெற்றுள்ளது. 1991, 2001, 2006, 2011, 2016, 2021 தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியை பிடிக்காவிடினும் கோவையில் வெற்றி பெறுவதை அதிமுக வாடிக்கையாக கொண்டுள்ளது.
அதிலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற்றது. அதன் பிறகு அலெர்டான முதல்வர் ஸ்டாலின், கோவைக்கு சற்று முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறார். உண்மையில் கோவைக்கு கடந்த 1991 ஆம் ஆண்டில் இருந்து திமுக, அதிமுக ஆட்சிகளில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்ன என்பதை காணலாம்.
அதிமுக
கோவை வடகோவை மேம்பாலம் பணிகள் கடந்த 1991ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1996 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பில்லூர் முதலாம் கூட்டு குடிநீர் திட்டம் (1995), பில்லூர் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் (2018) நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. கோவை - பொள்ளாச்சியில் 27 கிமீ தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. உக்கடம் பகுதியில் கடந்த 2018 ஆண்டு மேம்பாலம் பணி தொடங்கியது. இந்த மேம்பாலம் கடந்த வருடம் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி
திருச்சி சாலையில் கடந்த 2018 ஆம் வருடம் மேம்பால பணிகள் தொடங்கி, திமுக ஆட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை குளக்கரைகள் அலங்கரிக்கப்பட்டன. கோவை மாநகரில் 72 வார்டுகளுக்கு 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ராணுவ தளவாட உற்பத்தி மையம் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மேம்பாலங்கள்
விளாங்குறிச்சியில் எல்காட் ஐடி வளாகம் கடந்த 2020 ஆண்டு பணிகள் தொடங்கி, கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 தொடங்கி, நேற்று திறக்கப்பட்டது. கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பால பணிகள் தொடங்கி, கடந்த 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்தபேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைவிடப்பட்டது.
திமுக
2006 ஆம் ஆண்டு பில்லூர் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது டைடில் பார்க் கடந்த 2010 ஆம் ஆண்டு கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடந்த 2010 ஆண்டு கோவையில் பிரம்மாண்டமாக செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இதற்காக நகரை ஆங்காங்கே புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. சாய்பாபாகோவில் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
செம்மொழி பூங்கா
செம்மொழி மாநாட்டின்போது காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை மாற்றி, அதிமுக ஆட்சியில் இரண்டு அடுக்கு பாலமாக மாற்றி கடந்த 2017 ஆம் ஆண்டு திறந்தனர். செம்மொழி பூங்கா அடுத்த மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆண்டு மேற்கு புறவழிச்சாலை பணி தொடங்கியது. கடந்த 2024 ஆண்டு காந்திபுரம் பகுதியில் பெரியார் நூலகம், அறிவியல் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக ரூ.2,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
சர்வதேச கிரிக்கெட் மைதானம்
தங்க நகை பூங்கா பணியும் தொடங்கியுள்ளது. சாய்பாபாகோவில் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டித்து ஆரம்ப கட்ட பணிகள் நடந்துவருகின்றன. சர்வதேச ஹாக்கி மைதானம் பணி நடந்து வருகிறது. புதிய ஐடி பூங்கா, சர்வதேச கிரிக்கெட் மைதானம், பிளிச்சி பகுதியில் புதிய சிறைச்சாலை, பாதுகாப்பு, விண்வெளி சார்ந்த பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் கோவையின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் திட்டம், சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகம், மருத்துவமனை திமுக, அதிமுக ஆகிய 2 ஆட்சிகளிலும் நிறைவேற்றப்படவில்லை.












Click it and Unblock the Notifications