கோவையில் யார் தலை தப்பிக்கும்? - திமுக மா.செக்களுக்குள் கடும் போட்டி.. காய் நகர்த்தும் புதுமுகங்கள்!
கோவை : கோவை தி.மு.க பொறுப்பாளர்கள் மீது தலைமையும், தொண்டர்களும் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தலில் அதிரடி மாற்றம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், கோவையில் ஐந்தாக உள்ள கழக மாவட்டங்களை மூன்றாக இணைக்கவும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளதால் யார் தலை தப்பும் என மாவட்ட பொறுப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போதைய பொறுப்பாளர்கள் மீது புகார்கள் அதிகமாக உள்ளதால், பதவிக்கு குறிவைத்து புதிய நபர்களும் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல மாவட்டங்களில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அசுர பலத்தோடு ஆட்சி அமைத்தும் உட்கட்சி தேர்தலை மையமாக வைத்து எழுந்து வரும் பூசல்களால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளார். அதிலும், கோவை மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் பலரே தங்கள் பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

கோவை மாவட்ட திமுக
கோவையைப் பொறுத்தவரை திமுகவில் மாநகர் கிழக்கு, மேற்கு, புறநகர் வடக்கு, கிழக்கு, தெற்கு என ஐந்து கழக மாவட்டங்கள் உள்ளன. கோவை வடக்கு மாவட்ட செயலாளராக சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கி.வரதராஜன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நா.கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பையா ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலத்தில் 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக கோட்டைவிட்டது. இதனால் கொங்கு மண்டலத்தை குறி வைத்து களமிறங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதற்காகவே செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்து, கோவையில் திமுகவை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, செந்தில் பாலாஜியும் முழுநேரமாக கோவையிலேயே களமிறங்கி பணியாற்றி வருகிறார். கட்சியின் நிர்வாக வசதிக்காக ஐந்தை மூன்றாக இணைக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டு வருகிறார்.

மூன்றாக்க திட்டம்
2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் திமுகவிற்கு ஏற்பட்ட பெரும் தோல்விக்கு, மாவட்ட செயலாளர்களின் மெத்தன செயல்பாடே காரணம் என தலைமைக்கு புகார்கள் பறந்தன. அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது செந்தில் பாலாஜிக்கு முழு அதிகாரம் கொடுத்திருந்தார் ஸ்டாலின். இந்நிலையில், கோவை மாவட்ட திமுகவில் கட்சியின் நலனுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்யவும் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்பாளர்கள் மீது புகார்கள்
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் கட்சிக்காரர்களிடம், பதவி பெற்றுத் தருவதாக லட்சக் கணக்கில் பணம் வாங்கியதாக புகார்கள் உள்ளன. சட்டமன்றத் தேர்தலில் கோவையில் கட்சியின் தோல்விக்கு இவரும் ஒரு காரணமாக கூறப்பட்டார். கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி அதிமுகவின் முக்கிய புள்ளியுடன் ரகசிய நட்பைப் பேணி வருவதாக கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே புகார்கள் வாசிக்கப்பட்டன.

எதிரொலிக்கும்
மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் மீது செந்தில் பாலாஹி இருந்த மேடையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மகளிரணி நிர்வாகி ஒருவர் கடுமையாக குற்றம்சாட்டினார். அது தலைமை வரை சென்றது. அப்போதே சீனியர்களிடம் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார் ஸ்டாலின். அது இனி எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படி மாவட்டத்தின் பொறுப்பாளர்களில் பெரும்பாலானோர் மீது திமுக தொண்டர்கள் மத்தியில் புகார்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அதிரடி மாற்றம்
இதனால், பொறுப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்படலாம் என கோவை திமுகவினர் எதிர்பார்த்து வருகின்றனர். கோவை மாநகர் மாவட்டத்திற்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், மருத்துவர் கோகுல், கோட்டை அப்பாஸ், சிங்கை ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும், புறநகர் மாவட்டத்திற்கு தளபதி முருகேசன், பொள்ளாச்சி மகேந்திரன், மருத்துவர் வரதராஜன், டி.ஆர்.சண்முகசுந்தரம், வ.ம.சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இப்போது இருக்கும் ஐவரில் யார் தலை தப்பும் என்பதுதான் திமுக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வரும் ஹாட் டாபிக்.












Click it and Unblock the Notifications