இலங்கை துறைமுகத்தில் இந்தியாவை உளவு பார்க்கும் சீன கப்பல்- நிபந்தனைகளை பின்பற்றுமா?
கொழும்பு: இந்தியா, அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளை மீறி இலங்கை துறைமுகத்துக்குள் இந்தியாவை உளவு பார்க்கும் சீனாவின் கப்பல் அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனா உளவு கப்பலுக்கு இலங்கை விதித்த நிபந்தனைகளை சீனா பின்பற்றுமா? மீறுமா? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா நிதி உதவி வழங்கி மேம்படுத்தியது. இதற்காக சீனாவிடம் பெற்ற கடனை இலங்கையால் அடைக்க முடியவில்லை. இதனையடுத்து அம்பந்தோட்டா துறைமுகத்தை நீண்டகால குத்தகைக்கு எடுத்துக் கொண்டது சீனா.

சீனா நிலைப்பாடு
இந்நிலையில் சீனாவின் யுவான் வாங் 5 என்ற சர்ச்சைக்குரிய கப்பல், இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு வருகை தருவதாக தகவல்கள் வெளியாகின. சீனாவைப் பொறுத்தவரை செயற்கைக் கோள்களை கண்காணிப்பும் நவீன கருவிகளைக் கொண்ட கப்பல்தான் யுவான் வாங் 5 என்கிறது.

இந்தியா எதிர்ப்பு
ஆனால் இத்தகைய நவீன ரேடார் வசதிகளுடன் இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் சீனா கப்பல் முகாமிடுவதால் இந்தியாவின் பாதுகாப்பு நிலைகளுக்கு ஆபத்து; இலங்கையில் இருந்து சுமார் 700 கிமீ சுற்றளவில் உள்ள இந்தியாவின் அனைத்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் சீனாவால் எளிதாக உளவு பார்க்க முடடியும் என்பது இந்தியாவின் கருத்து. இதனால் தொடக்கம் முதலே இந்த யுவான் வாங் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்கவே கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. இந்தியாவின் இத்தகைய கருத்தை அமெரிக்காவும் ஆதரித்தது.

இலங்கை நிபந்தனைகள்
இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பைத் தொடர்ந்து இலங்கைக்குள் சீனா கப்பல் நுழைவதைத் தாமதம் செய்யுமாறு அந்நாடு வேண்டுகோள் விடுத்துள்ளது அதன்பின்னர் இலங்கை-சீனா இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை கடல் பகுதிக்குள் சீனா உளவுக் கப்பல் அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடக் கூடாது; சீனா கப்பலின் தானியங்கி அடையாள அமைப்புகள் இலங்கைக்குள் இருக்கும் போது இயக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது சீனா கப்பல் என்ன செய்கிறது என்பது தெரிய வேண்டும் என்கிற நிபந்தனைகளை விதித்தது இலங்கை.

இலங்கையில் சீனா உளவு கப்பல்
இதனையடுத்தே சீனா கப்பல் இலங்கைக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக கடுமையான எதிர்ப்புக்கு இடையே சீனாவின் உளவு கப்பல் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்றை இந்தியா, இலங்கைக்கு அன்பளிப்பாகவும் வழங்கியிருந்தது. இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் சீனா உளவு கப்பல் நிபந்தனைகளை பின்பற்றுமா? மீறுமா? எனபதுதான் அடுத்த சர்ச்சையின் மையப் புள்ளி.












Click it and Unblock the Notifications