திடீர் பரபரப்பு! சரியாக இந்திய போர்க்கப்பல் இருக்கும் நேரம் இலங்கையில் சூழ்ந்த சீன போர்க்கப்பல்கள்
கொழும்பு: இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் நேற்று திங்கள்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குச் சென்ற நிலையில், சரியாக அதேநேரம் பார்த்து சீன கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்களும் அங்கு வந்துள்ளது. சீன கப்பல்களின் வருகையை இலங்கை கடற்படையினர் உறுதி செய்துள்ள போதிலும் எதற்காக என்பது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் இலங்கை அளிக்கவில்லை.
நமது அண்டை நாடான இலங்கை சீனாவுக்குச் சொந்தமான கப்பல்கள் அவ்வப்போது தொடர்ந்து சென்று வருகிறது. சீனாவுக்கு இலங்கை மிகப் பெரிய கடனை திரும்ப அளிக்க வேண்டி இருக்கும் நிலையில், சீனாவுக்குச் சாதகமாகப் பல முடிவுகளை இலங்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் நேற்று திங்கள்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ளது. அதே நாளில் சீன கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்களும் அங்கு வந்தது.
இலங்கையில் ஐஎன்எஸ் மும்பை: இந்தியக் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் மும்பை மூன்று நாள் பயணமாக இப்போது இலங்கைக்குச் சென்றுள்ளது. 163 மீட்டர் நீளம் கொண்ட ஐஎன்எஸ் போர்க்கப்பல் மொத்தம் 410 பணியாளர்களைக் கொண்டதாகவும். டெஸ்டிராயர் டைப் கப்பலான ஐஎன்எஸ் மும்பை துறைமுகத்திற்கு வந்த போது இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். ஐஎன்எஸ் போர்க் கப்பல் இலங்கை நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
சீன கப்பல்கள்: ஐஎன்எஸ் மும்பை அங்குச் சென்ற அதேநேரம் சீன கடற்படையின் மூன்று போர்க் கப்பல்களும் அங்கு வந்தன "HE FEI", "WUZHISHAN" மற்றும் "QILIANSHAN" ஆகிய மூன்று போர்க்கப்பல்களும் நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதில் "HE FEI" போர்க்கப்பல் 144.50-மீட்டர் நீளமுள்ள டெஸ்டிராயர் கப்பலாகும். அதில் 267 வீரர்கள் உள்ளனர். "WUZHISHAN" (210-மீட்டர்) கப்பலில் 872 கடற்படை வீரர்களும், "QILIANSHAN" (210 மீட்டர்) கப்பலில் 334 கடற்படை வீரர்களும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
எதற்காக: இலங்கை விமானப்படையில் உள்ள டோர்னியர் கடல் ரோந்து விமானங்களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை ஐஎன்எஸ் மும்பை எடுத்துச் சென்றுள்ளது. இலங்கை விமானப் படை வீரர்கள் இந்தியக் கடற்படையால் இப்போது பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஐஎன்எஸ் மும்பை இப்போது கொழும்பில் இருக்கும் நிலையில், அதில் இருந்த கடற்படை ஊழியர்கள் அருகே உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர்.
இந்த கப்பல் இலங்கை கடற்படையுடன் இணைந்து பயிற்சிகள், யோகா மற்றும் கடற்கரையைச் சுத்தம் செய்தல் போன்ற கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், ஐஎன்எஸ் மும்பை கப்பலின் செயல்பாடுகள் குறித்தும் இலங்கை கடற்படைக்கு விளக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், இலங்கை கடற்படைக் கப்பலுடன் பாசேஜ் பயிற்சியில் ஈடுபடும். அதைத் தொடர்ந்து ஐஎன்எஸ் மும்பை வரும் ஆகஸ்ட் 29ம் தேதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படும்.
எட்டாவது முறை: இந்தாண்டு இந்தியக் கப்பல் ஒன்று இலங்கை செல்வது இது எட்டாவது முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே ஐஎன்எஸ் கப்ரா, கரஞ்ச், கமோர்டா மற்றும் ஷல்கி, இந்தியக் கடலோரக் காவல்படையின் சமர்த், அபினவ் மற்றும் சசெட் ஆகிய கப்பல்கள் இலங்கைக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications