இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா - செப்டம்பர் 6 வரை முழு லாக்டவுன் அறிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால் இலங்கை அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.
கொழும்பு: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கையில் செப்டம்பர் 6ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொற்றுக்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
3.2 கோடி மக்கள் வாழும் இலங்கையில் மருத்துவமனைகள் கோவிட் -19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள் கொரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

இதையடுத்து மருத்துவ வல்லுநர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்க உடனடியாக நாடு தழுவிய பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் 20 முதல் இலங்கையில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,12,370 பேராக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 4600 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 209 பேர் உயிரிழந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,157 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் அங்கு லாக்டவுன் அமலில் உள்ளதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் வருகை இன்றி சுற்றுலாத்துறையும் நலிவடைந்துள்ளது.
அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தாலும் மக்கள் அதை கடைபிடிக்காமல் இருப்பதால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீரா,65 உயிரிழந்தார். நாடு முழுவதும் தொற்று பரவலும் மரணங்களும் அதிகரித்து வருவதால் செப்டம்பர் 6ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications