"சோறு போட்ட தெய்வமே.." சடலத்தை கட்டியணைத்து கதறிய குரங்கு.. அன்பாக முத்தம் கொடுத்து நெகிழ்ச்சி
கொழும்பு: இலங்கையில் உள்ள நபர் ஒருவருக்கும் குரங்கிற்கும் இடையே இருந்த உறவைப் பிரதிபலிக்கும் வகையில் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான உறவு மிகவும் அழகானது. பல நேரங்களில் மனிதர்கள் செய்யும் சிறு செயல்களை மிருகங்கள் கடைசி வரை நினைவில் கொண்டு உள்ளன.
என்றோ உதவிய மனிதர்களைப் பல ஆண்டுகள் கழித்துப் பார்த்த போது விலங்குகள் நினைவில் கொண்டு இருக்கும் அழகிய தருணங்கள் பல அரங்கேறி உள்ளன.

இலங்கை
அப்படி மனிதர்களுக்கும் குரங்கிற்கும் இடையே இருந்த அழகிய உறவைப் பிரதிபலிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நமது அண்டை நாடான இலங்கையில் தான் இந்தச் சம்பவம் நடந்து உள்ளது. இலங்கையில் மட்டகளப்பு அருகே உள்ள தாளங்குடா பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன். 56 வயதான இவர் விலங்குகள் மீது மிகுந்த பாசத்தைக் கொண்டவர்.

குரங்கு
தாளங்குடா பகுதியில் அமைந்துள்ள இவரது வீட்டிற்குக் குரங்கு ஒன்று தினசரி வரும். அந்த குரங்கை விரட்டாமல் பாசத்துடன் அதற்குத் தினமும் உணவு கொடுத்து வந்துள்ளார் பீதாம்பரம் ராஜன். மேலும், அவருடன் கொஞ்ச நேரம் விளையாடுமாம். இதையே தான் அந்த குரங்கு பல மாதங்களாகத் தொடர்ந்து செய்து வந்தது. என்ன நடந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் அந்த குரங்கு அங்கு வந்துவிடுமாம்.

புரியவில்லை
அவரும் அதற்கு உணவளித்து விளையாடுவார். இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பீதாம்பரம் ராஜன் சில நாட்களுக்கு முன் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது அப்போது அந்த குரங்கும் அங்கு வந்துவிட்டது. தனக்கு எப்போதும் உணவு அளித்து விளையாடும் பீதாம்பரம் ராஜன் சடலத்தைப் பார்த்தும், முதலில் எழுப்ப முயன்றது.

அழுகை
பீதாம்பரம் ராஜனின் சடலத்திற்கு அணிவிக்கப்பட்டு இருந்த சட்டையைப் பிடித்து இழுத்தது. பின்னர், முகத்தை வருடிப் பார்த்தது. அப்போதும் பீதாம்பரம் ராஜனின் உடலில் அசைவு இல்லாததைப் பார்த்த பின்னரே அவர் உயிரிழந்துவிட்டதைக் குரங்கு உணர்ந்தது. இதையடுத்து பீதாம்பரம் ராஜன் அருகே சென்று அந்த குரங்கு கண்ணீர் சிந்தி அழுதது. மேலும், ராஜனை கட்டித்தழுவி முத்தமிட்டது.

முத்தம்
முதலில் குரங்கு வந்ததும் எதாவது மோசமான செயலை செய்துவிடுமோ என்றே அங்கு இருந்தவர்கள் அஞ்சி உள்ளனர். இருப்பினும், அந்த குரங்கு தனக்கு உணவு அளித்த மனிதருக்கு அஞ்சலி செலுத்தி முத்தமிட்டதைப் பார்த்தும் அங்கிருந்தவர்களும் கூட கண்ணீர் விட்டனர். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மனித மிருக மோதல்
இந்த நவீன உலகத்தில் நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்களின் பேராசையால் காடுகளின் பரப்பளவு குறைந்து வரும் நிலையில், மனித விலங்கு மோதல்களும் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான சமயங்களில் நாம் விலங்குகளையே குற்றஞ்சாட்டுகிறோம். இருப்பினும், மனிதர்கள் கொஞ்சம் அன்பு செலுத்தினால் விலங்குகள் எந்தளவுக்கு அன்பைத் திரும்பச் செலுத்தும் என்பதைக் காட்டுவதாக இந்த வீடியோ அமைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications