மிக மோசமான நிலையில் இலங்கை.. உணவுக்கு அல்லாடும் மக்கள்.. ஐஎம்எஃப்பிடம் கையேந்தும் அவல நிலையில் அரசு
கொழும்பு : நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஆசியாவின் மிக மோசமான பணவீக்கத்தை அனுபவித்து வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளை பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து பார்த்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் என்பது சுற்றுலாத் துறையை சார்ந்ததே. இந்தச் சூழலில் கொரோனா காரணமாக இரு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடக்கி கிடக்கிறது.

இலங்கை அரசு
சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது; இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்திருக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

உணவு பஞ்ச அபாயம்
எனவே இவற்றின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் இலங்கை மிகப்பெரிய உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் அபாயமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அரிசி, சர்க்கரை, பால், மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இலங்கையில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும் சூழலும் உருவாகியுள்ளது. மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாணய மதிப்பு சரிவு
மேலும், அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உத்தரவாத விலையில் விற்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையை ராணுவம் மேற்பார்வையிடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மதிப்பானது அதள பாதளத்தில் சரிந்துள்ளது. உள்ளூர் நாணயத்தின் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சியாக இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வட்டி விகிதங்களை அதிகரித்ததுடன், வங்கிகளுக்கு வரவேண்டிய கடன்பாக்கிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது.

அதிகரித்த கடன்
அந்நாட்டு மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டிற்கான மொத்த கடனை திருப்பிச் செலுத்தும் $7 பில்லியனுக்கு எதிராக இலங்கையில் சுமார் 2 பில்லியன் டாலர் வெளிநாட்டு நாணய கையிருப்பு உள்ளது. ஜூலையில் முதிர்ச்சியடையும் $1 பில்லியன் டாலர் பத்திரமும் இதில் அடங்கும். நாணயத்தின் மதிப்பு சரிவு, பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஆசியாவின் மிக மோசமான பணவீக்கத்தை அனுபவித்து வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளை பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications