இலங்கையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் அவசர நிலை பிரகடனம்- அதிபர் கோத்தபாய ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் அன்னிய செலாவணி நெருக்கடி கையிருப்பு இல்லாத நிலையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இலங்கையில் உணவு பொருட்கள் பற்றாக்குறை தொடர்பான அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே.
Recommended Video
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் கடுமையான உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, பால்மாவு, எரிவாயு ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இந்த அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உணவுப் பொருட்கள் பற்றாக்குறை- அவசரநிலை
இதனையடுத்து உணவுப் பொருட்களை பதுக்குவதைத் தடுக்கும் வகையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே உணவுப் பொருட்கள் தொடர்பான அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அரிசி, சக்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இறக்குமதிக்கு தடை
மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அவசரநிலைப் பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள் பதுக்கல்
நெல், அரிசி, சீனி (சர்க்கரை) உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலைக்கு விற்பதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

ஒருங்கிணைப்பாளராக ராணுவ அதிகாரி
சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications