ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே? வதந்தி பரப்பப்படுவதாக இலங்கை பிரதமர் அலுவலகம் விளக்கம்!
கொழும்பு : இலங்கையில் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இதனை மறுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டு காலமாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொரோனாவால் நாட்டின் பிரதான வருவாய்த் துறையாக விளங்கும் சுற்றுலாவில் முடக்கம் ஏற்பட்டதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது.

மக்கள் போராட்டம்
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகின்றனர். உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டியுள்ளதால் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் வீட்டிற்கு வெளியே வியாழன் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கூடி, நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்காக அவர் பதவி விலகக் கோரி போராடிய நிலையில் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

அவசரநிலை பிரகடனம்
இந்நிலையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக இலங்கையில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சஷவின் இல்லத்தை முற்றுகையிட நூற்றுக்கணக்கான மக்கள் முயற்சித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் போராட்டம்
இலங்கையில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி மாணவர்கள் மற்றும் எதிர்கட்சியினர் போராடி வரும் நிலையில் நிலைமை அங்கு மோசமாகி வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டாலும் போராட்டம் தீவிரமாகி வருகிறது. இதனால் தண்ணீரை பீய்ச்சியடித்தும் , கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை ராணுவத்தினர் விரட்டித்தனர்.
Recommended Video

மகிந்த ராஜினாமா
இந்நிலையில் இலங்கையில் அரசு மற்றும் கூட்டணி கட்சிகளுக்குள் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியதாக முதலில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த மகிந்த ராஜபக்சவின் ராஜினாமா கடித்தத்தை இலங்கை அதிபர கோத்தபய ராஜபக்ச ஏற்க மறுத்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மகிந்த ராஜபாக்ச ராஜினாமா கடிதம் வழங்கவில்லை எனவும், இது தவறான தகவல் என அந்நாட்டு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications