'குழப்பம்..' கச்சா எண்ணெய் வாங்கக் கூட காசில்லை.. இந்தியாவிடம் கடன் வாங்கும் இலங்கை.. என்ன பிரச்சினை
கொழும்பு: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் இலங்கை 500 மில்லியன் டாலர் கடனாகக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2020இல் தொடங்கி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுபாதாளத்தில் சென்றது. அதிலும் 2020 ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியத்திற்குக் கீழாகவும் சென்றது.
இந்தச் சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்லத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கச்சா எண்ணெய் தேவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இ.பி.எஸ் நீக்கப்படுவார்.. ஓ.பி.எஸ் சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவார்.. புகழேந்தி சொல்கிறார்
கொரோனா பாதிப்பு
அதிலும் இவ்வளவு விரைவாக கொரோனாவில் நாம் மீள்வோம் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இயல்பு நிலை மிக வேகமாகத் திரும்பியது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் மின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுத்த சில மாதங்களுக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குக் கச்சா எண்ணெய் உற்பத்தி இருக்காது என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென உயரத் தொடங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. அதிலும் நமது அண்டை நாடான இலங்கை கச்சா எண்ணெய்க்குக் கூட பணம் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனா உள்ளிட்ட நாடுகளிடம் பெற்ற கடன் காரணமாகவும் அந்நாட்டின் இலங்கையில் அன்னிய செலாவணி பிரச்சினையும் தலைவிரித்து ஆடுவதால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் திணறி வருகிறது.
இலங்கை திணறல்
இலங்கையில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை வைத்துக் கொண்டு அடுத்த ஜனவரி மாதம் வரைதான் தாக்குப் பிடிக்கும் என இலங்கை மின் துறை அமைச்சர் உதாயா கம்மன்பெல வெளிப்படையாகவே எச்சரித்திருந்தார். கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்தும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களைச் சிங்கப்பூரிடம் இருந்துமே இலங்கை இறக்குமதி செய்கிறது. இதற்குத் தேவையான பணத்தை டாரகாவே இலங்கை கொடுத்தாக வேண்டும்.
இந்தியாவிடம் கடன்
இலங்கை அரசுக்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு ஏற்கனவே அந்நாட்டின் இரண்டு பொதுத்துறை வங்கிகளான சிலோன் வங்கி, மக்கள் வங்கிகளிடம் 3.3 பில்லியின் டாலர் கடன் வைத்துள்ளது. இந்தச் சூழலில் தான் இந்தியாவிடம் இலங்கை கடன் கேட்டுள்ளது. இது தொடர்பாக சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவர் சுமித் விஜேசிங்க கூறுகையில், "இந்திய - இலங்கை பொருளாதார கூட்டு ஏற்பாட்டின்படி இந்தியத் தூதரகத்திடம் 500 மில்லியன் அமெரிக்க டாலரைகடனாகக் கோரியுள்ளோம். இந்த பணத்தை பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கப் பயன்படுத்துவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்
இந்த கடன் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கல் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். சுற்றுலாவையே பெரும்பாலும் நம்பியிருந்த இலங்கைக்கு கொரோனா பெருந்தொற்று மிகப் பெரிய அடியைக் கொடுத்தது. இதனால் அந்நாட்டின் ஜிடிபி கடந்த ஆண்டு மட்டும் 3.6 சதவிகிதம் சரிந்தது. அதேபோல அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை மாதத்தில் பாதியாகக் குறைந்தது.
செலவு அதிகரிப்பு
இதனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச வணிகம் டாலரில் தான் நடக்கும் என்பதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை அதிக விலைக்குக் கொடுக்க வேண்டிய சூழல் இலங்கைக்கு ஏற்பட்டது. இதில் கச்சா எண்ணெய்யும் விதிவிலக்கு இல்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை இந்த ஆண்டு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவழித்துள்ள தொகை மட்டும் 41.5 சதவீதம் உயர்ந்துள்ளது.