பெரிய திருப்பம்! தப்பியோடிய கோத்தாபய ராஜபக்ச.. இலங்கையின் அடுத்த அதிபர் ஆகும் நாடாளுமன்ற சபாநாயகர்?
கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அடுத்து அரசியல் சூழல் எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கை நாட்டில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இந்த நெருக்கடி அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்துள்ளது.
அந்நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இதை மீட்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

இலங்கை
ஆனால் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்தே வந்தது. இதனால் மக்கள் போராட்டம் மிகவும் தீவிரமடைந்தது. இதையடுத்து அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். அதன் பின் அமெரிக்கா மற்றும் உலக வங்கியிடம் நிதி பெற முயல்வது எனப் பல முயற்சிகளை அவர் எடுத்தார்.

போராட்டம்
அவர் எடுத்த முயற்சிகளுக்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இலங்கை பொருளாதாரம் தொடர்ந்து இக்கட்டான சூழலிலேயே இருந்தது. மின்சாரம், எரிபொருள், மருந்துகள், உணவு எனப் பல அத்தியாவசிய பொருட்களுக்கும் அங்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் இப்போது இக்கட்டான சூழல் நிலவுவதால், மக்கள் போராட்டம் மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது. கடும் கொந்தளிப்பில் மக்கள் இன்று முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

அதிபர் மாளிகை
இலங்கை அதிபர் கோத்தாபய ராஜபக்ச மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளனர். இருப்பினும், அப்போது கோத்தாபய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இல்லை. போராட்டம் குறித்து உளவுத் துறை முன்கூட்டியே ரிப்போர்ட் அளித்து இருந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். கொழும்பு துறைமுகத்தில் இருந்து அவர் கப்பலில் ஏறிச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஒப்புதல்
மக்கள் போராட்டம் கையை மீறிச் செல்லும் சூழலில் தற்போது நிலவும் சூழல் குறித்து ஆலோசிக்க அந்நாட்டின் சபாநாயகர் இல்லத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி உள்ளனர். முதலில் பதவி விலக மறுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பின்னர் அனைத்துக் கட்சி அரசு அமைந்தால் ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சபாநாயகர்
இதனிடையே தற்போது இருக்கும் சூழலில் அந்நாட்டின் சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிபர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால் அந்நாட்டின் அரசியலமைப்பு விதிகளின்படி சபாநாயகர் அபேவர்தன தற்காலிக அதிபராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரது தலைமையில் அனைத்து கட்சிகளை உள்ளிடாக்கிய அரசு அமையும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications