கொரோனா அச்சம்.. இந்திய பயணிகள் வருவதற்கு இலங்கை அதிரடி தடை.. விமான சேவை நிறுத்தம்!
கொழும்பு: கொரோனா அதிகரித்து வருவதால் இந்திய பயணிகள் இலங்கை செல்வதற்கு அந்த நாட்டு அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுடன் நேரடி விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஆதிக்கம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சபட்ச அளவாக 4 லட்சத்தை கடந்து விட்டது. உயிரிழப்பும் 3,900 ஆக உள்ளது. இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா, இந்திய மக்களை மட்டுமல்லாது உலக மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

உலக நாடுகள் தடை
இதனால் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தி உள்ளன. அமெரிக்கா , பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கான நேரடி விமான சேவையை ரத்து செய்து விட்டது. அமெரிக்காவும் இந்திய மக்கள் தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஏற்கனவே தடை விதித்தது.

ஆஸ்திரேலியா சென்றால் ஜெயில்
இதில் ஒருபடி மேலே சென்ற ஆஸ்திரேலியா இந்தியாவில் இருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அதிரடியாக அறிவித்துள்ளது. இதையும் மீறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த நாடு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் நமது அண்டை நாடான இலங்கையும் இந்தியர்கள் வருவதற்கு தற்போது தடை விதித்துள்ளது.

இலங்கையும் தடை
இது தொடர்பாக இலங்கை விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ' இந்தியாவில் கொரோனா தொடர்ந்து வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்தால்தான் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications