போராட்டக்காரர்களை ஒடுக்கும் இலங்கை! எல்லை தாண்டக்கூடாது! ஐநா மனித உரிமைகள் ஆணையம் ‛அட்வைஸ்’
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்குள் உட்பட்டு இருக்க வேண்டும். இதில் இலங்கை எல்லை மீறக்கூடாது என இலங்கைக்கு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் ‛அட்வைஸ்' வழங்கியுள்ளது.
இலங்கை 1948 ல் சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது அவசர நிலை வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் போராட்டம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையின் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அமைதியான வழியில் எதிர்ப்பை காட்டும் பொதுமக்களின் நடவடிக்கையை தடுக்கும் செயல்களில் சட்டத்தை பயன்படுத்த கூடாது எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக இந்த ஆணையத்தின் செய்தி தொடர்பாக லிஸ் த்ரோசல் கூறியதாவது:

உன்னிப்பாக கவனிக்கிறோம்
‛‛இலங்கையில் பல தசாப்தங்கள் கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இலங்கையின் நடவடிக்கை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

தேவையற்ற கட்டுப்பாடுகள்
மார்ச் 31ல் அதிபர் இல்லத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அந்நாட்டு அரசாங்கம் ஏப்ரல் 1ம் அவசர நிலையை அறிவித்தது. ஏப்ரல் 2ல் மாலை 6 மணி முதல் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏப்ரல் 3ம் தேதி சுமார் 15 மணி நேரம் சமூக ஊடகங்களை முடக்கியது. இதன்மூலம் போராட்டக்காரர்கள் மீது அதிகப்படியான மற்றும் தேவையற்ற போலீஸ் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

எல்லை மீறக்கூடாது
அமைதியான போராட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதை தடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள், பொது நலன் சார்ந்த விஷயங்களில் விரக்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் நாங்கள் கவலைப்படுகிறோம். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்குள் உட்பட்டு இருக்க வேண்டும். அமைதி வழியில் போராடுபவர்களை தடுக்கவோ, ஒடுக்கவோ கூடாது. இதில் இலங்கை எல்லை மீறக்கூடாது.

பேச்சுவார்த்தை
மேலும் இலங்கை தனது பொருளாதார நெருக்கடி, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொதுமக்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டும். இதனால் அர்த்தமுள்ள வகையில் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்












Click it and Unblock the Notifications