இலங்கை: கொழும்பில் இன்றும் கோத்தபாய பதவி விலக கோரி போராட்டம்- அதிபர் அலுவலகத்தில் நுழைய முயற்சி!
கொழும்பு: இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை மிக மிக கடுமையாக உயர்ந்து பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் கேன்களுடன் பொதுமக்கள் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இப்படி காத்திருப்பவர்களுக்கும் விற்பனை நிலையம் நடத்துபவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு ரூ7,500 கோடி கடனுதவி கொடுத்துள்ளது இந்தியா. அத்துடன் சர்வதேச நிதியத்தின் உதவியையும் இலங்கை நாடியுள்ளது.சர்வதேச நிதியத்திடம் உதவி பெறுவதற்கும் இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் இலங்கை முழுவதும் இத்தகைய போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று ஜே.வி.பி.யின் இளைஞர் பிரிவினர் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவுக்கு எரிவாயு சேமிப்பு கிடங்குகள் வழங்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போதைய போராட்டங்களை தொடர்ந்து நடத்தப் போவதாக ஜேவிபி ஏற்கனவே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications