இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... கையெழுத்திட்ட எதிர்க்கட்சி தலைவர்
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், அதிபரை விசாரணைக்கு உட்படுத்தும் இம்பீச்மென்ட் தீர்மானம் மற்றும் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தத்தை மாற்றம் செய்யும் வகையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) தலைவர் சஜித் பிரேமதாசா முடிவு செய்து அதற்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தினமும் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

மக்கள் போராட்டம்
இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள் இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றம் கடந்த 5ம் தேதி முதல் கூடியது. ஆனால் அதில் எந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் முடிவு
இந்நிலையில் கூட்டு அமைச்சரவைக்கு மறுப்பு தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பாலவேகய (எஸ்ஜேபி) கட்சி இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுபற்றி சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறுகையில், "அதிபர் கோத்தபய ராஜபக்சே பொருளாதார நெருக்கடி குறித்து பொதுமக்களுக்கு உரையாற்றி நிவாரணம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்
இதனால் எப்போது வேண்டுமானாலும் இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் தான் இன்று இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கையெழுத்திட்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்துடன், அதிபரை விசாரணைக்கு உட்படுத்தும் ‛இம்பீச்மென்ட்' தீர்மானமும் கொண்டு வரப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றத்தை தாண்டி பல அதிகபட்ச அதிகாரங்கள் அதிபருக்கு மட்டுமே உள்ளது. இதையும் குறைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அரசியலமைப்பு திருத்த சட்டம் 20ல் மாற்றம் செய்யவும், 19வது திருத்த சட்டத்தை கொண்டு வரவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
Recommended Video

நாடாளுமன்றம் எப்போது
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர். இலங்கையில் கூடிய நாடாளுமன்ற முதல் அமர்வு சிங்கள புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற 2வது அமர்வு ஏப்ரல் 19ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வேளையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications