புலிகளுடனான போரின்போது.. இந்தியாவிற்கு அகதிகளாக வந்த குடிமக்களை திரும்ப அழைக்க குழு: இலங்கை அரசு
கொழும்பு: உள்நாட்டு போரையொட்டி இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலங்கை குடிமக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர குழு ஒன்றை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக அளவில் இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடியுரிமை, உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தங்கள் நாட்டு குடிமக்களை மீண்டு சொந்த நாட்டிற்கு அழைத்துவர குழு உருவாக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித்தவிக்கும் நிலையில் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பான பென்ஸ் காரில் பயணித்தும் சைரஸ் மிஸ்ரி மரணம் ஏன்? அரசு, மக்களுக்கு 6 பாடங்கள்
குழு அமைப்பு
இலங்கையில் அந்நாட்டு அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறியவர்கள் பலர் இந்தியாவில் அகதிகளாக அடைக்கலமாகினர். அதில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில், இவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கு அழைத்து வர இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின்படி இந்த நடவடிக்கைகளை மேற்கொள் குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
வலியுறுத்தல்
இலங்கை குடியேற்ற அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் கொண்டு இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக இலங்கை அதிபரின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இம்மாதிரி குழு அமைக்கப்பட வேண்டும் என 'ஈழ அகதிகளுக்கான புனர்வாழ்வுக்கான அமைப்பு' வலியுறுத்தியிருந்தது. இந்த வலியுறுத்தலின் அடைப்படிடையில்தான் இக்குழுவை அந்நாட்டு அரசு அமைத்திருக்கிறது.
கோரிக்கைகள்
இந்தியாவிலிருந்து இலங்கை வரும் அகதிகளுக்கு முதற்கட்டமாக அந்நாட்டு மதிப்பில் ரூ.30,000 வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் அவர்களது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சர்வதேச தனியார் நிறுவனங்களின் தரப்பில் வீடு கட்டித்தரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகள் குறித்து அரசு இன்னமும் எதையும் உறுதி செய்யவில்லை.
அகதிகள் விவரம்
தற்போது வரை இந்தியாவில் 106 அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 58,800 பேர் வசித்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்து வருபவர்களில் 25,000 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலையக தமிழர்கள் என சொல்லப்படுகிறது. இந்த மலையக தமிழர்களில் பலர் சொந்த நாடு திரும்ப விரும்பவில்லை. இந்தியாவிலேயே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மொத்த அகதிகளில் தற்போதுவரை சுமார் 4,000 பேர் வரை இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.