சென்னை - திருச்சி ஹைவேயில் பயங்கர விபத்து.. 3 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதல்! 40 பயணிகள் காயம்
கடலூர்: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 3 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. பஸ்சில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். 40 க்கும் மேற்பட்ட பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தமிழகத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையை பயன்படுத்துகின்றன. லாரிகள், கார்கள், அரசு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் என நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் அணி வகுத்து செல்லும்.

அதிலும், இரவு வேளைகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் அதிக அளவில் செல்வதை காணமுடியும். இதனால் எப்போதும் வாகன நெரிசல் காணப்படும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் அருகே வேப்பூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
3 ஆம்னி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டுள்ளன. முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்து நிறுத்தியதால், பின்னால் அதி வேகத்தில் வந்த ஆம்னி பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக டமார் என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதின. இந்த விபத்தால் பேருந்தில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த பயணிகள் அலறியடித்தபடி எழுந்தனர்.
3 ஆம்னி பஸ்கள் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த பயணிகள் வேப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பஸ்கள் அசுர வேகத்தில் செல்வதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் எனவும் ஆம்னி பஸ்கள் அரசு வரைமுறைப்படுத்தியுள்ள வேகத்தின் படி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications