'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்'.. கடலூர் அருகே தந்தையின் உடல் முன்பு காதலியை திருமணம் செய்த மகன்
கடலூர்: "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே, தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே, தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா, மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா" என்று பாடல் வரிகளை பலர் கேட்டிருப்போம். தந்தையை இழந்த மகனின் வலியை இந்த பாடல் உணர்த்தி இருக்கும். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தந்தையை இழந்த மகன் அவர் உடலை அடக்கம் செய்யும் முன்பு செய்த காரியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவரது மகன் அப்பு என்பவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் விஜயசாந்தி என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அப்பு நொறுங்கி போனார். எனினும் தனது தந்தையின் ஆசியுடன் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்பிய அப்பு, காதலி விஜயசாந்திக்கு, அப்பாவின் முன்பு திருமணம் செய்தார். இந்த சம்பவத்தை முழுமையாக விரிவாக பார்ப்போம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்த 63 வயதாகும் செல்வராஜ் என்பவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். அவருடைய மகன் அப்புக்கு 32 வயது ஆகிறது. இவர் பி.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். விருத்தாசலம் அடுத்த அரசக்குழி கிராமத்தை சேர்ந்த 23 வயதாகும் விஜயசாந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் விருத்தாசலம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கவணை கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு விஜயசாந்தி சென்று வந்தபோது அப்புவுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. அது காதலாக மாறி, இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்களாம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இதை கேள்விப்பட்ட அப்பு உள்ளிட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் உறவினர்கள் செல்வராஜின் உடலை அவரது வீட்டுக்கு எடுத்து வந்து இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பு எனது தந்தையின் ஆசியுடன் தான் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று கூறி கதறி அழுதார். உடன் உறவினர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி, உடனே திருமணம் செய்வோம் என கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து அப்பு, தனது காதலி விஜயசாந்தியை நேரில் அழைத்தார். அவரும் அப்புவின் வீட்டிற்கு வந்தார். அங்கு செல்வராஜியின் உடலை நாற்காலியில் அமர வைத்தனர். அருகில் அவரது மனைவி கண்ணம்மாள் மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார். அப்போது உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்து நிற்க தனது தாய், தந்தை இருவருக்கும் பாத பூஜை உள்ளிட்ட திருமண சடங்குகளை அப்பு செய்தார்.
தொடர்ந்து அவர் கண்ணீர் ததும்ப தனது தந்தையின் கையில் தொட்டு வாங்கிய தாலியை காதலி விஜயசாந்தியின் கழுத்தில் கட்டி அவரை திருமணம் செய்தார். பின்னர் தாய், தந்தை இருவரின் காலில் விழுந்து அவர்கள் ஆசி பெற்றனர். அப்போது கண்ணம்மாள் கண்களில் நீர் ததும்பியடி அழுதபடியே தனது மகன், மருமகளை வாழ்த்தி. தொடர்ந்து அங்கு நின்ற உறவினர்கள், நண்பர்களும் கண்ணீர் மல்க அப்பு, விஜயசாந்தி தம்பதியை வாழ்த்தினர். இதையடுத்து உறவினர்கள், நண்பர்களின் இறுதி மரியாதைக்கு பிறகு செல்வராஜியின் உடலை அங்குள்ள சுடுகாட்டுக்கு எடுத்து உறவினர்கள் அடக்கம் செய்தனர்.இந்த சம்பவம் விருத்தாச்சலம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications